May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

பேப்பரை பார்த்து கண்ணாயிரம் ஆதங்கம்/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayiram Athamangam / Comedy Story / Tabasukumar

27.11.2023
கண்ணாயிரம் சுற்றுலா பஸ் விபத்தில் காயமடைந்து பாளை ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விபத்து பற்றி அவர் காலை நாளிதழில் வந்த செய்தியை படித்துக் கொண்டிருந்தார்.
காயம் அடைந்தவர்கள் லிஸ்டில் தன் பெயர் இல்லாததால் கோபம் அடைந்த அவர் உயிர் ஊசல் லிஸ்டில் தன் பெயர் இடம் பெற்றிருப்பதைப் பார்த்த அவர் தனது வயது 90 என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சுடிதார் சுதா, பூங்கொடி ஆகியோரது பெயர் இருக்கிறதா என்று மீண்டும் படித்துப் பார்த்தார். அடடே.. அவங்க பெயரை காணமே.. அவங்க என்ன நினைப்பாங்க என்று வருத்தப்பட்டவர் அருகில் உள்ள பெட்டில் இருந்தவரிடம் ஏங்க.. இந்த சுடிதார்சுதா, பூங்கொடி பெயர் எல்லாம் போடலையே ஏன் என்று கேட்டார்.
அதற்கு அவர்..ஏம்பா காயம் அடையாதவர்கள் பெயர் எல்லாம் போடமாட்டாங்க.. என்க.. கண்ணாயிரம்.. இது அநியாயம், இது அக்கிரமம் .. அவங்களுக்கு என்ன ஆச்சு என்று ஊரில் உள்ளவர்கள் கேட்கமாட்டாங்களா.. இந்த பூங்கொடி, இந்த சுடிதார் சுதா நல்லா இருக்காங்க என்று ஒருவர் எழுதலாமில்லையா.. பேப்பர் காரங்க ரொம்ப மோசம் என்று குற்றம் சாட்டினார்.
அருகில் இருந்தவர் அட போப்பா…அவங்கள சத்தம் போடாதே..காயம் அடைந்த உன் படத்தைத்தானே போட்டிருக்காங்க என்க.. கண்ணாயிரம் எங்கே..எங்கே என்று கேட்டார். மேலேப் பார் என்று அவர் சொல்ல கண்ணாயிரம் பேப்பரில் மேலே பார்க்க.. கால்கட்டி தொங்கவிட்டபடி ஒருவர் மற்றும் மூன்று பேர் படம் கறுப்பு வெள்ளையில் போடப்பட்டிருந்தது.
கண்ணாயிரம் உற்றுப்பார்த்துவிட்டு அது நானில்லை என்க அருகில் இருந்தவர்.. ஏய் நீதாம்பா..கால் கட்டி தொங்கவிட்டிருந்தது நீதான்.. கறுப்பு வெள்ளை படம் போட்டதால் சரியாக தெரியவில்லை.. சேலையால் மூடியிருக்கிறது நீதானப்பா என்றார்.
கண்ணாயிரம் மீண்டும் அந்தப் படத்தைப் பார்த்தார். ஏங்க..பஸ் கவிழ்ந்ததை கலரில் போட்டவங்க.. காயமடைந்த என் படத்தையும் கலரில் போட்டிருக்கலாமில்லையா… நான் சாதாரண ஆளா..என்று கேட்டார்.
அருகில் இருந்தவர்.. இல்லை.. கலரில் போட்டிருக்கலாம்.. கறுப்பு வெள்ளையில் போட்டது தப்புதான் என்று கண்ணாயிரத்துக்கு ஆதரவாகச் சொன்னார்.
கண்ணாயிரம்..அதான்னே…கறுப்பு வெள்ளையிலே படம் போட்டாங்களே.. கீழே .. புகழ்மிக்க கண்ணாயிரம்.. அப்படின்னு போட்டிருக்கலாமில்லையா.. ஊரில என்ன எப்படி கண்டுபிடிப்பாங்க.. நானா ஒவ்வொருத்தரிடமும் போய் இது நானு.. இது என்படம் என்று சொல்ல முடியுமா.. என்று ஆதங்கப்பட்டார்.
அருகில் இருந்தவர்..கண்ணாயிரம் வருத்தப்படாதே.. நீ கருப்பா இருக்கிறதாலே கறுப்பு வெள்ளை படம் போட்டாங்களோ என்னமோ..நீ வெள்ளையா இருந்தா கலர்படம் போட்டிருப்பாங்க.. என்க கண்ணாயிரம் முகம் சிவந்தது.
ஏங்க..அப்போ கவிழ்ந்து கிடக்கும் பஸ் என்ன கலரா.. என்று கண்ணாயிரம் கேட்க.. அருகில் இருந்தவர் பஸ்சில கலர் டிவி எல்லாம் இருந்துச்சுல்லா..அதுதான் கலரில படம் போட்டிருப்பாங்களோ என்னவோ.. என்றார்.
கண்ணாயிரம்..சரி அப்படியும் இருக்கலாம்..ஆனா என்படத்துக்கு கீழே என் பெயர் போட்டிருக்கலாமில்லையா.. என்க அருகில் உள்ளவர் உன் பெயர் அவங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்க.. என்னிடம் கேட்டு எழுதியிருக்கலாமே என்றார் கண்ணாயிரம்.
அதற்கு அவர் நீதான் தூங்கிக்கிட்டியிருந்தியே என்று சொல்ல.. அதற்கு கண்ணாயிரம் தட்டி எழுப்பிக் கேட்டிருக்கலாமில்லா என்று வாதிட்டார்.
உடனே அவர். அட விவரம் இல்லாம பேசாதப்பா.. உன்ன எவ்வளவோ தட்டி எழுப்பிப்பார்த்தாங்க..நீ எழும்பவே இல்ல.. அப்பவும் நீ எழும்பவே இல்ல.. அதான் நீ போயிட்டியோன்னு நினைச்சி உயிர் ஊசல் என்று போட்டுட்டாங்க என்றார்.
கண்ணாயிரம் ம்..அப்படியா..என்று அப்பாவியாக கேட்ட போது சுடிதார் சுதா, பூங்கொடி, பயில்வான் ஆகியோர் கண்ணாயிரம் இருந்த தீவிர சிகிச்சை பிரிவுக்கு வேகமாக வந்தனர்.
பூங்கொடியைப் பார்த்ததும் கண்ணாயிரம்.. ஓ என்று அழ.. பூங்கொடியோ.. உங்களுக்கு உயிர் ஊசல் என்று பேப்பரில போட்டிருந்துச்சே. நீங்க புழைச்சிட்டியளா என்று கண்களை கசக்க கண்ணாயிரமோ.. என் காலை கட்டி தொங்கவிட்டிருந்தாங்க.. அதுதான் ஊசலாடிச்சு.. அதைப் பார்த்து தப்பா போட்டுட்டாங்க என்றார்.
அதைக் கேட்ட பூங்கொடி.. நீங்க தூங்கினாலே உயிர் ஊசலாடுற மாதிரிதான் தூங்குவிங்க..அதான் அப்படி போட்டிருப்பாங்க.. அவங்களை தப்பு சொல்லாதீங்க என்று பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் டென்சன் ஆனார்.
என்ன பூங்கொடி அப்படி சொல்லுற.. எனக்கு வயசு என்ன என்று கேட்க..ஆடி பிறந்தா ஐம்பது பிறக்கும் என்றார் பூங்கொடி.
உடனே கண்ணாயிரம் பேப்பரை எடுத்துக்காட்டினார். பார்.எனக்கு 90 வயசுன்னு போட்டிருக்கு.. இது சரியா.. ஆதார் கார்டில கூட என்படம் பரவாயில்லை . பேப்பரிலே என் படம் சுத்தமா தெரியல என்று ஆதங்கப்பட்டார்.
அதற்கு பயில்வான்..நீ அழகா இருந்தாத்தான பேப்பரில அழகாக வரும் என்று சொல்ல கண்ணாயிரம் நான் நல்லா குளிச்சிட்டு வந்தேனே..அழகா இல்லையா என்று கேட்டார்.
பின்னர் அது இருக்கட்டும்..என் அழகு பேப்பருக்கு தெரியாது. சின்னப் பிள்ளைங்க கூட என்னைப் பாத்து சிரிக்குமே.. நான் அழகா இல்லன்னா சின்னப் பிள்ளைங்க சிரிக்குமா என்று கேட்டார்.
பயில்வான் அடவிடுப்பா..என்று சொல்ல.. கண்ணாயிரம் எப்படிவிட முடியும்.. என் வயசு 90 அப்படின்னு போட்டிருக்கே.. அது தவறில்லையா என்று கேட்க.. அது எழுத்துப்பிழையாக இருக்கும் என்று பயில்வான் சொன்னார்.
கண்ணாயிரம் உடனே..இந்த கதையெல்லாம் விடாதீங்க…உங்க வயசு 50 என்று சரியா போட்டிருக்காங்க. நீங்க பயில்வான். தப்பா போட்டா அடிப்பீங்கன்னு பயந்து போய் சரியா போட்டிருக்காங்க.. என்ன கோமாளின்னு நினைச்சாங்களா.. ஊருல பாத்தா..என்ன கண்ணாயிரம் குற்றாலம் டூர் போயி 90 வயசாயிட்டா என்று கேலி பேசமாட்டாங்களா என்று கேட்டார்.
பயில்வான் அவரை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் அவர் அமைதியாகவில்லை. பூங்கொடி அவரிடம் ஏங்க.. உயிரோட இருக்கிங்கன்னுதானே போட்டிருக்காங்க..விடுங்க..என்றார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.