கண்ணாயிரத்தின் ராசி பலன்/ நகைச்சுவை கதை / தபசுகுமார்
1 min readKannayira’s Rasi Palan/ Comic Story / Tabasukumar
29.11.2023
கண்ணாயிரம் பஸ்விபத்தில் காயம் அடைந்து பாளை ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வேளையில் தனது பெயர் காயமடைந்தவர்கள் லிஸ்டில் இல்லை என்றும் உயிர் ஊசலாடியவர்கள் லிஸ்டில் உள்ள தன் பெயரில் வயது 90 என்று போடப்பட்டுள்ளதால் கோபத்தில் இருந்தார்.
பயில்வானும் பூங்கொடியும் சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை. எனக்கு நேரம் சரியில்லை. எல்லாம் தப்பு தப்பா நடக்குது என்று புலம்பினார்.
அப்போது அருகில் இருந்தவர்..கண்ணாயிரம் கவலைப்படாதே.. உன் ராசி என்ன என்று கேட்டார். அதற்கு கண்ணாயிரம் மகரம் என்க.. பேப்பரில ராசி பலன் போட்டிருக்குது பாரு.. இனியாவது நல்ல காலம் புறக்குமான்னு படி என்று சொன்னார்.
கண்ணாயிரம் பேப்பரை உருட்டினார். உள்பக்கம் மாத ராசி பலன்கள் போடப்பட்டிருந்த இடத்தில் மகர ராசியை தேடிப்பிடித்து படித்தார்.
மகர ராசி நேயர்களே.. எதையும் தாங்கும் இதயம் கொண்டவர் நீங்கள். பேச்சாற்றலால் பிறரை கவரக்கூடியவர். உங்களை ஏமாற்ற நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள். நிற்க.. என்று படித்தவர்
என்ன நிற்க சொல்லியிருக்காங்க.. புரியலையே என்று திணற அருகில் நின்ற பயில்வான் .. என்ன ஆச்சு… தொடர்ந்து படி..என்றார்.
கண்ணாயிரம் .ம். படிக்கிறேன் என்றபடி… அதாவது.. பாத சனி தற்போது உங்களுக்கு நடக்கிறது. எனவே பயணத்தில் கவனம் தேவை. காலில் காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று படித்தவர்.. நிறுத்தினார்.
பூங்கொடி அவரிடம்.. ஏன் நிறுத்திட்டிங்க.. சரியாத்தான் போட்டிருக்கு என்றார்.
கண்ணாயிரம்..ம் எங்கே சரியாப் போட்டிருக்கு.. எனக்கு காலில் காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று போட்டிருக்கு.. ஆனால் எனக்கு தொடையில் அல்லவா காயம் ஏற்பட்டிருக்கு என்க.. பயில்வான் அட.. கால் என்றாலே அதில் தொடையும் அடங்குமப்பா.. என்க கண்ணாயிரம் நீங்க பேப்பருக்கு சப்போர்ட்டா பேசுறீங்க.. என்று குற்றம் சாட்டினார்.
அது இலலப்பா.. அது மகர ராசிக்கு ராசிபலன்.. கண்ணாயிரத்துக்கு மட்டும் உள்ள ராசி பலன் இல்லை.. அதனால.. தப்பு சொல்லக்கூடாது. ராசி பலன் ஏறக்குறைய சரியா இருக்கும். போதும் என்று சொன்னார்.
கண்ணாயிரம் திருப்தி அடையவில்லை.ராசிபலன் துல்லிய கணிப்புன்னு போட்டிருக்கே..அப்போ துல்லியமா கரெக்ட்டா இருக்கவேண்டாமா என்று வாதிட்டார்.
பயில்வான் சற்று கோபத்தில் கண்ணாயிரம்..பேப்பரு எவ்வளவு காசு கொடுத்து வாங்கினே என்று கேட்க..கண்ணாயிரமோ..நான் எங்கே காசு கொடுத்து வாங்கினேன்..நண்பர் கொடுத்தார்.. அதை வாங்கி படிக்கிறேன் என்க.. பயில்வானோ..அட.. ஓசி பேப்பர் படிக்கிறீர்களா.. ஓசி பேப்பர் படிச்சிட்டு குறை சொல்லக்கூடாது.. காசு கொடுத்து பேப்பர் வாங்கி படிச்சிட்டு பேசணும் சரியா என்றவுடன் கண்ணாயிரம் பேப்பரை மடக்கி அருகில் உள்ளவரிடம் கொடுத்தார்.
கோபப்படாதே கண்ணாயிரம்…ராசி பலன் படி என்று அருகில் உள்ளவர் கூற.. கண்ணாயிரம் பேப்பரை வாங்கி.. நீங்க சொல்லுறதால படிக்கிறேன் என்று படித்தார்.
உங்கள் வாழ்க்கை மேடு பள்ளம் நிறைந்தது. இதில் பல சரிவுகளை நீங்கள் சந்தித்து இருக்கலாம். விபத்து என்ற பெருங் கண்டத்திலிருந்து தப்புவீர்கள். என்றவர் பயில்வானைப் பார்க்க..பயில்வானோ.. அதை புரிந்து கொண்டு பெருங்கண்டமுன்னு போட்டிருக்க.. அது எங்கேன்னு கேட்கக் கூடாது.. கண்டமுன்னா கண்டம்.. அவ்வளவுதான் என்றார்.
கண்ணாயிரம் விழிக்க..பயில்வானோ தலையை அசைத்தபடி..கண்ணாயிரம் உன்னிடமிருந்து தப்புவதே பெரிய கண்டத்திலிருந்து தப்புவது போலத்தான் .. ராசி பலன் படி என்றார்.
கண்ணாயிரம்..ம் பெரிய கண்டமுன்னா எது..நம்ம ஊர் ஜோசியக்காரரிடம் கேட்போம் என்று முடிவு செய்தவர் படிக்கத் தொடங்கினார்.
பனி படர்ந்த இருளுக்குள் தவிக்கும் நீங்கள் விரைவில் ஒளிமயமான எதிர்காலத்தை காணப்போகிறீர்கள். பயப்பட வேண்டாம். பயில்வானே வந்தாலும் தூக்கி வீசுவீர்கள்..என்று படிக்க பயில்வான் உஷாராகி.. கண்ணாயிரம்.. என்ன படிக்கிற.. உண்மையிலே பயில்வான் என்றுதான் போட்டிருக்கா .. சரியா பார் என்க. கண்ணாயிரம்..ஏங்க..பேப்பரில போட்டதைத்தான் படிக்கிறேன்.. என்றார்.
பயில்வான்..என்ன இப்படி போட்டிருக்காங்க…அது சரி இல்லையே..பேப்பரைப் கொடு என்று கேட்க.. கண்ணாயிரம்.. ஓசி பேப்பர் படிக்கக் கூடாது.. பயில்வான் சார். காசு கொடுத்து வாங்கி படிங்க என்று அருகில் உள்ளவரிடம் பேப்பரை மடக்கிக் கொடுத்தார்.
-வே.தபசுக்குமார்.புதுவை.