May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

பயில்வானிடம் சிக்கிய கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayiram trapped by Bailwan/ comedy story / Tabasukumar

1.12.2023
கண்ணாயிரம் விபத்தில் சிக்கி பாளை ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில் விபத்து குறித்து பேப்பரில் போட்டிருப்பதைப் படித்தார். பின்னர் தனது வயது தவறாக போட்டிருப்பதாக குற்றம் சாட்டியவர் இறுதியில் ராசிபலன் வந்திருப்பதை படித்தவர் அதிலும் குற்றம் கண்டுபிடித்தார்.
அப்போது பயில்வான் பேப்பர் காரர்களுக்கு ஆதரவாகப் பேச கண்ணாயிரம் கோபம் கொண்டு மகர ராசிக்காரர்களுக்குரிய பலனை சொல்லும் போது பயில்வானே வந்தாலும் தூக்கி வீசிவிடுவீர்கள் என்று படிக்க.. உண்மையில் அப்படிப் போட்டிருக்கா என்று அதிர்ச்சியுடன் பயில்வான் கேட்க கண்ணாயிரம் தப்பிப்பதற்காக ஓசி பேப்பர் படிக்கக் கூடாது என்று பேப்பரை மடக்கி அருகில் உள்ளவரிடம் கொடுத்தார்.
உடனே பயில்வான் தன்னுடன் வந்த வாலிபரிடம் காசைக் கொடுத்து இன்றைய பேப்பர் ஒண்ணு வாங்கிட்டுவா தம்பி என்று அனுப்பினார்.
அந்த வாலிபர் வேகமாகச் சென்று கடையில் இருந்து காலை நாளிதழ் பேப்பரை வாங்கிக்கொண்டு ஓடி வந்தார்.
பயில்வான் முஷ்டியை மடக்கிவிட்டுக் கொண்டு..என்னிடமே விளையாடுறீயா என்றபடி பேப்பரை புரட்டி ராசிபலன் பக்கத்தை படித்தார். அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே..ம்….அதாவது..ம்..அப்புறம்..உங்கள்வாழ்க்கை ஒளி வீசும்.. நீங்கள் பக்கத்தில் யார் வந்தாலும் தூக்கி வீசுவீர்கள் என்று படித்துவிட்டு கண்ணாயிரத்தை முறைத்துப் பார்த்தார்.
ஏய் கண்ணாயிரம் தப்பாவா சொல்லுற.. பயில்வானை தூக்கி வீசுவீர்கள் என்று எங்கே போட்டிருக்கு.. பக்கத்தில் யார் வந்தாலும் தூக்கி வீசுவீர்கள் என்றுதானே போட்டிருக்கு..ஏன் பொய் சொன்னே என்று மிரட்டினார்.
கண்ணாயிரம் நான் படிச்ச பேப்பரில் அப்படித்தான் போட்டிருந்தது. பக்கத்தில் பயில்வான் வந்தாலும் தூக்கி வீசுவீர்கள் என்றுதான் இருந்தது என்றார்.
எப்படி ஒரே பேப்பரில இரண்டுவிதமாக வரும்.. நீ பொய் சொல்லுற.. உண்மையைச் சொல்லு என்க கண்ணாயிரம்.. உண்மையாக அப்படித்தான் இருந்தது என்றார்.
பயில்வான் ஆத்திரத்தில் ஏய்..கதைவிடாத..அந்த பேப்பரைப் பார்ப்போம். நீ சொன்னமாதிரி இல்லன்னா தொலைச்சிடுவேன் என்க கண்ணாயிரம்.. நான் உண்மையைத்தான் சொல்லுறன். உண்மையைத்தவிர வேறு ஒன்றும் இல்லை என்று சொன்னார்.
உடனே பயில்வான்.. எனக்கு நம்பிக்கை இல்லை..கண்ணாயிரம் விளையாடுறான். கண்ணாயிரம் சொல்லுற மாதிரி போட்டிருந்தா பேப்பர்காரங்களை விடமாட்டேன் என்று கொக்கரித்தார்.
கண்ணாயிரம் அருகில் உள்ள பெட்டில் இருந்தவர் ..பயில்வான்சார்.. கண்ணாயிரம் படிச்ச பேப்பரைப் பாருங்க என்று கொடுத்தார். பயில்வான் வேகவேகமாக ராசிபலன் பக்கத்தை புரட்டி மகரராசிக்குரிய பலனை படித்தார். இறுதியில் பக்கத்தில் பயில்வானே வந்தாலும் தூக்கி வீசுவீர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதைப் படித்ததும் பயில்வான் டென்சனாகி…ஆ..கண்ணாயிரம் சொன்னமாதிரிதான் போட்டிருக்கு.. ஆ..பயில்வான் என்றால் இளக்காரமா நினைச்சாங்களா.. இந்த பத்திரிக்கைகாரங்களை சும்மா விடப்போவதில்லை. ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன் என்றபடி முஷ்டியை மடக்கி உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்தார். மூச்சு வாங்கியபடி ம் விடமாட்டேன் என்று முஷ்டியை உயர்த்திக்காட்டி.. ஆ.. என்று கத்த அங்கே வந்த நர்ஸ்.. யாருங்க..உள்ளே வந்து கத்துறது.. இவ்வளவு கூட்டமா. டாக்டர் சத்தம் போடுவாரு போங்க போங்க.. என்று விரட்ட .. பயில்வான் பெரு மூச்சுவிட்டபடி வெளியேற பூங்கொடி மற்றும் அவருடன் வந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
பூங்கொடி போவதைப் பார்த்து கண்ணாயிரமும் சேலையை தூக்கிக்கொண்டு கிளம்ப அதைப்பார்த்த நர்ஸ் கோபத்தில் ஏங்க.. நீங்க பேசண்டுதானே.. நீங்க ஏன் வெளியே போறீங்க.. உங்களை வெளியே போகக்கூடாது என்று சொல்லியிருக்கேன்ல என்று சொல்ல கண்ணாயிரம் விழி பிதுங்கியபடி தனது பெட்டில் போய் இருந்தார்.

கோபத்தில் சென்ற பயில்வான் இரண்டு பேப்பரையும் கையில் வைத்துக்கொண்டு ஆஸ்பத்திரி முன் அங்கும் இங்கும் நடந்தார். நேரே அந்த பத்திரிகை ஆபீசுக்கு போயி கேட்கணும். வருத்தம் தெரிவிக்கச் சொல்லணும்.. விடக்கூடாது.. பயில்வான் சங்கம் என்றால் சும்மாவா.. ராசி பலன் படிச்சவங்க.. பயில்வான்னா சும்மா தூக்கி வீசிடலாமுன்னு நினைப்பாங்களே.. ஆ.. என் நெஞ்சு போறுக்குதில்லையே .. இந்த பேப்பர்காரங்களை என்ன செய்யுறன் பாருங்க என்றபடி கண்கள் சிவக்க லெப்ட் ரைட்.. என்று வேகமாக நடந்தார்.
அப்போது மாலை பத்திரிகை நிருபர் குமார் அப்பாவியாக விவரம் தெரியாமல் பாக்கியராஜ் பாணியில்… சாரே.. நீங்கதான் பயில்வானா என்று கேட்க பயில்வான்..ஆமா..நான்தான் பயில்வான்..நீங்க யாரு என்று முரட்டு குரலில் கேட்டார். அதற்கு அவர்..நான் பத்திரிகை நிருபர் என்று சொன்னவுடன் பயில்வான்.. வேகமாக.. வாய்யா.. பத்திரிகை நிருபா..உன்னைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்.. எப்படிய்யா தப்பா போட்டே என்று காலை பத்திரிகையைக் காட்டி மிரட்ட அப்போது அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்.. என்ன சத்தம்.. பத்திரிகைகாரங்களிடம் என்ன தகராறு.. உள்ளே போயிடுவீங்க போங்க… போங்க என்று எச்சரித்துவிட்டு சென்றார்.
அதைக்கேட்டதும் பயில்வான் கொஞ்சம் இறங்கி வந்தார் .என்ன சார்.. இது நியாயமா..பயில்வான் என்றால் எல்லோரும் பயப்படுவாங்க. ஆனால் பேப்பரில ராசிபலனில் பக்கத்தில் பயில்வான் வந்தாலும் தூக்கி வீசுவீர்கள் என்று எப்படி போட்டிருகீங்க என்று கேட்க.. நிருபர் திணறினார். பின்னர் சுதாரித்துக்கொண்டு சார், இது காலை பேப்பர்.. நாங்க மாலை பேப்பர்.என்றார்.
ஆனால் பயில்வான் விடவில்லை. எனக்கு அதெல்லாம் தெரியாது. பேப்பருன்னா எல்லாம் பேப்பர்தான் பதில் சொல்லுங்க என்றார். நிருபர் பதில் சொல்ல யோசித்தார்.
பின்னர் அந்த காலை பத்திரிகை நிருபர் இப்போது வருவார்.அவரிடம் பேசுங்கள் என்க அப்போது மோட்டார் சைக்கிளில் டப டப என்று சத்தமிட்டபடி அங்கே வந்தார். என்ன பஞ்சாயத்து.. என்று போலீஸ்காரர் போல் மிரட்டல் தொனியுடன் கேட்க.. பயில்வான் கொஞ்சம் விழித்தபடி.. சார்.. நீங்களே சொல்லுங்க.. பயில்வானை குறைச்சி போடலாமா என்று காலை பேப்பரைக் காட்ட.. அதைப் பார்த்த காலை பத்திரிகை நிருபர் என்ன அதிகமாத் தான் இருக்கு.. எங்கே குறைச்சிப் போட்டிருக்கு என்று கேட்க பயில்வான்.. அட.. இவர் கண்ணாயிரத்துக்கு அண்ணனா இருப்பார் போல.. நாம உஷாரா இருக்கணும் என்று முடிவு செய்தார்.
சார்..பக்கத்தில் பயில்வான் வந்தாலும் தூக்கி வீசிவிடுவீர்கள் என்று போடலாமா.. எங்க அருமை பெருமை என்ன ஆவது என்று கேட்டார்.
உடனே நிருபர்..வேகமாக..ஏங்க பயில்வான்னு போட்டிருக்கு..பயில்வான்னு உங்கபெயர் போட்டிருக்கா.. பிறகு ஏன் சத்தம் போடுறீங்க என்று மடக்க.. பயில்வான் பம்மினார். சார்.. இங்கே பாருங்க.. இரண்டும் ஒரே பேப்பர்தான்.. ஆனா ஒண்ணுல பக்கத்திலே பயில்வான் வந்தாலும் தூக்கி வீசுவீங்க என்று போட்டிருக்கு. இன்னொன்றில் பக்கத்தில் யார் வந்தாலும் தூக்கி வீசுவீங்கன்னு போட்டிருக்கு என்றார்.
நிருபர் அதைப்பார்த்துவிட்டு..யோவ் ஒண்ணு முதல் எடிசன் பேப்பர்.. இரண்டாவது காட்டுனது லோக்கல் எடிசன்.. அதிலே சரியா இருக்கில்ல.. பிறகு ஏன் கத்துற என்று சொல்ல பயில்வான்.. அமைதியானார்.
சரி..கண்ணாயிரம் பிரச்சினையை கண்ணாயிரமே கேட்டுக்கட்டும்.. நமக்கேன் பிரச்சினை என்று நினைத்தவர்..சரி சார் நீங்க போயிட்டு வாங்க வணக்கம் என்று அனுப்பிவைத்தார்.

காலை பத்திரிகை நிருபர் மோட்டார் சைக்கிளில் படபட பட என்று புறப்பட்டு சென்றார்.(தொடரும்)

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.