ஐ.எஸ்.,சுக்கு ஆள் சேர்க்க அரபிக் கல்லூரிகளில் பயிற்சி: என்.ஐ.ஏ. தகவல்
1 min readTraining in Arabic Colleges for I.S., Sukku Aal: N.I.A.
12.2.2024
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்தது தொடர்பாக, தமிழகத்தில், சென்னை, மதுரை, நெல்லை உட்பட, 21 இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஏராளமான டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதுடன், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022 அக்., 23ல், கார் குண்டு வெடித்து சிதறியது. இதில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்ட, உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின், சம்பவ இடத்திலேயே பலியானார்.
ப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள், 14 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது, சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பை நடத்துவதற்கும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பதற்கும், சென்னை மற்றும் கோவையில் உள்ள அரபிக் கல்லுாரிகளில் பயிற்சி அளிக்கப்பட்டதும், சதி திட்டம் தீட்டப்பட்டதும் தெரியவந்தது.
அதனால், சென்னை, நெல்லை, கோவை, மதுரை உட்பட, 21 இடங்களில், நேற்று முன்தினம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
பயிற்சி
இந்த சோதனை குறித்து, என்.ஐ.ஏ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகம் முழுதும், 21 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ஆறு மடிக்கணினிகள், 25 மொபைல் போன்கள், 34 சிம்கார்டுகள், மூன்று ஹார்ட் டிஸ்க்குகள் என, ஏராளமான, ‘டிஜிட்டல்’ ஆவணங்கள் சிக்கின. இவை, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு, ரகசியமாக ஆட்கள் சேர்க்க பயன்படுத்தப்பட்டவை.
சென்னை மற்றும் கோவையில் உள்ள அரபிக் கல்லுாரிகளில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ரகசியமாக ஆட்களை சேர்க்க சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
அரபிக் பாடம் நடத்துவது போல, பயங்கரவாத அமைப்புக்கு இளைஞர்களை சேர்த்து, அவர்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பது மற்றும் அதை வெடிக்க வைப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், அரபிக் வகுப்பு நடத்துவது போலவும், சமூக வலைதளங்கள் வாயிலாக அரபிக் வகுப்பு நடத்துவது போலவும், பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஏற்கனவே கைதாகியுள்ள, 14 பேரில், 10 பேர் கோவை அரபிக் கல்லுாரியில், பயங்கரவாத செயலுக்கான பயிற்சி எடுத்தது உறுதியாகி உள்ளது.
கடந்த, 2019ல், இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில், 250 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த கொடூரத்தை நிகழ்த்திய, ஐ.எஸ்., பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிமை தங்களின் குருவாக ஏற்று, கோவை கார் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் செயல்பட்டுள்ளனர். அரபிக் கல்லுாரிகளில் சஹ்ரான் ஹாசிம் பேச்சும் ஒலிபரப்பப்பட்டு உள்ளது.
அத்துடன், தமிழகத்தில் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி, பயங்கரவாத செயலில் ஈடுபடவும், வெடிகுண்டு தாக்குதல் நடத்தவும் சதி திட்டம் தீட்டி உள்ளனர்.
சதி திட்டம்
என்.ஐ.ஏ., சோதனையின் போது, சென்னை அரபிக் கல்லுாரியில் பயிற்சி பெற்ற மற்றும் வகுப்பு எடுத்த, ஜமீல் பாஷா உமாரி, இர்ஷாத், மவுலவி ஹூசைன் பைசி, அப்துல் ரஹ்மான் உமரி ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.
இவர்களில், அப்துல் ரஹ்மான் உமரியிடம், கோவை கார் குண்டு வெடிப்பு மற்றும் பயங்கரவாத செயலுக்கு சதி திட்டம் தீட்டியது தொடர்பாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.