குற்றாலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்
1 min readPanchayat Council Chairman Federation Advisory Meeting at Courtalam
26.2.2024
இலஞ்சி குற்றாலம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட மற்றும் தென் மாவட்ட தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை வகித்தார். கடையம் ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் பூமிநாத், துணைத் தலைவர் அழகுதுரை முன்னிலை வகித்தனர். பொட்டல்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தொகுத்து வழங்கினார். மைதீன்பீவி அசன் வரவேற்றார். ஆலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு செயலாளர் சந்திரசேகர், நீதி ராஜன், தென்காசி மாவட்ட தலைவர்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழ ஆம்பூர் மாரிசுப்பு, அடைச்சாணி மதியழகன், மேலஆம்பூர் குயிலி லெட்சுமணன், வெங்கடம்பட்டி சாருகலா ரவி, மடத்தூர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், சிவசைலம் மலர் மதிசங்கர பாண்டியன், வீரா சமுத்திரம் ஜீனத் பர்வீன் யாக்கூப், மந்தியூர் கல்யாணசுந்தரம், தெற்கு மடத்தூர் பிரேமலதா ஜெயம், கடையம் ராமலட்சுமி ராமதுரை, ஐந்தாம்கட்டளை முப்புடாதி பெரியசாமி, துப்பாக்குடி செண்பகவல்லி ஜெகநாதன், தருமபுரம்மடம் ரூகான் ஜன்னத் சதாம், கடையம் பெரும்பத்து பொன்சீலா பரமசிவன், ரவண சமுத்திரம் முகமது உசேன், பாப்பான்குளம் முருகன், திருமலையப்பபுரம் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ஒப்பந்த புள்ளியை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மூலமே விடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போதுள்ள டி என் பாஸ் முறையை ரத்து செய்து விட்டு பழைய பி எப் எம் எஸ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஊராட்சிக்குட்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆப்ரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை மக்கள் தொகையின் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். வீடு கட்டுவதற்கு கட்டிட அனுமதி விண்ணப்பம் ஆன்லைன் மூலம் செய்வதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இதனை தடை செய்ய வேண்டும். ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட பகுதிகளில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
2011ல் வழங்கப்பட்ட மானியத்தை மறு ஆய்வு செய்து 2024ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மானியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 1994ம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போது விவசாயப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடனாநதி, ராமநதி அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரை உடனடியாக நிறுத்தி வைத்து விட்டு பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அணையில் நீரை சேமித்து வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஊராட்சி மன்ற தலைவர்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதன்மைச் செயலாளர், ஊராட்சி இயக்குனர், துறை சார்ந்த அமைச்சர் ஆகியோருக்கு பலமுறை மனு அளித்தும் தமிழகத்தை சேர்ந்த 7600 ஊராட்சி மன்ற தலைவர்கள் மனு அளித்துள்ளனர். இருந்தும் முறையாக இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததை கண்டித்து வரும் மார்ச் மாதம் 12ம் தேதி அன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சாவியை ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.