தென்காசி அருகே அக்காவை வெட்டிக்கொலை செய்த தம்பி கைது
1 min read
Brother arrested for hacking sister to death near Tenkasi
16.3.2024
தென்காசி அருகே அக்காவை வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையை அடுத்த செட்டிகுறிச்சியை சேர்ந்தவர் மாரியப்பன். கூலி தொழிலாளி. இவருக்கு சுபாவேணி( வயது 21) என்ற மகளும் வேல்முருகன், மகேஸ்வரன், கௌதமன், ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.
இவரது மூத்த மகள் சுபா வேணி (வயது 21). அய்யனார்குளத்தைச் சேர்ந்த அவரது அத்தை மகன் கருப்பசாமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுருதி மாதவ் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சுபா வேணிக்கும் அவரது கணவர் கருப்பசாமிக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சுபா வேணி கணவரை பிரிந்து கடந்த 6 மாதமாக தாய் வீடான செட்டிகுறிச்சியில் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
கணவரை பிரிந்து அக்காள் தங்கள் வீட்டில் வசித்து வருவது அவரது தம்பி மகேஷ்வரனுக்கு பிடிக்க வில்லை என கூறப்படுகிறது. மேலும் அக்கா அடிக்கடி செல்போனில் யாருடனோ நீண்ட நேரம் பேசுவதையும் அவர் கண்டித்துள்ளார். இதனால் அக்காள் தம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மகேஷ்வரன் தனது தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது. சுபாவேணி தன் குழந்தை மற்றும் தாய் லெட்சுமியுடன் அங்கு வந்துள்ளார். லெட்சுமி தனது பேரக்குழந்தையுடன் தோட்டத்தில் இருந்த போது சுபாவேணி செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும் ஆத்திரத்தில் மகேஷ்வரன் அக்காளின் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சுபாவேணி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்தும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலையுண்ட பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அக்காவை வெட்டிக்கொலை செய்த அவரது தம்பி மகேஸ்வரனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.