கேரளாவிற்கு நூதன முறையில் ஜல்லிக்கல் கடத்தல்- லாரி பறிமுதல் டிரைவர் கைது
1 min readJallikal smuggled to Kerala in a modern way- Lorry seized, driver arrested
23.4.2024
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு லாரியில் நம்பர் பிளேட்டை மாற்றி நூதன முறையில் ஜல்லிகற்கள் கடத்திய நபரை வழிமறித்து கைது செய்த போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
கேரள மாநிலம் கொட்டாரக்கரை முகலுவில்லா பகுதியைச் சேர்ந்த டேனியல் என்பவரது மகன் ரெஜி (வயது 33) இவர் நேற்று ஒரு டிப்பர் லாரியில் அதிக அளவில் ஜல்லி ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் அஞ்சல் பகுதிக்கு கொண்டு சென்றார். அப்போது தமிழக கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் தமிழக போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் டிரைவர் ரெஜி அந்த டிப்பர் லாரியை சோதனை சாவடியில் நிறுத்தாமல் வேகமாகக் கொண்டு சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பைக்கில் அந்த லாரியை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த டிப்பர் லாரியின் நம்பரை மாற்றி போலியான பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட் பொருத்தியதோடு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் ஜல்லிக்கற்களுடன் கேரளாவுக்கு செல்ல முயன்றது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து புலியரை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்த போலீசார் அந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.