காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் தோல்வி
1 min read
Defeat of former Kashmir Chief Ministers
4.5.2024
காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி இருவரும் அவரவர் தொகுதியில் தோல்வி அடைவதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
காஷ்மீரில் செயல்படும் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியன இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. ஆனால், காஷ்மீரில் இவ்விரு கட்சிகளும் தனித்தனியாக களம் கண்டன.
தேசிய மாநாட்டு கட்சி சார்பில் அதன் தலைவர் ஒமர் அப்துல்லா பாரமுல்லா தொகுதியில் களமிறங்கினார். இந்த தொகுதியில் அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கு சுயேச்சையாக களமிறங்கிய அப்துல் ரஷீத் ஷேக், 4,33,213 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 1,95,126 ஓட்டுகள் முன்னிலையில் இருக்கிறார். ஒமர் அப்துல்லா 2,42,212 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார். இறுதியில் அவர் தோல்வியை தழுவினார். இதனையடுத்து அவர், தனது தோல்வியை ஒப்புக் கொண்டு உள்ளார்.
இது தொடர்பாக ஒமர் அப்துல்லா வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: தோல்வியை ஏற்பது தவிர்க்க முடியாதது. ரஷீத் வெற்றிக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த வெற்றி மூலம், அவர் சிறையில் இருந்து விடுதலை பெறுவார் அல்லது வடக்கு காஷ்மீர் மக்களுக்கு பிரதிநிதி கிடைப்பார் என எதிர்பார்க்கவில்லை. ஜனநாயகத்தில் அனைத்தும் ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதேபோல், மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி ஆனந்த் நாக் – ரஜோரி தொகுதியில் களமிறங்கினார். அவரை எதிர்த்து தேசிய மாநாட்டு கட்சி சார்பில் மியான் அல்தாப் அஹமது களமிறங்கினார். இவர், 5,16,808 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் 2,79,303 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மெகபூபா முப்தி 2,37,505 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார். இறுதியில் மெகபூபா தோல்வி அடைந்தார்.
இதனையடுத்து தோல்வியை ஏற்றுக் கொண்டு மெகபூபா முப்தி வெளியிட்ட அறிக்கையில், மக்களின் தீர்ப்பை மதிக்கிறேன். மக்கள் ஜனநாயக கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் கடின உழைப்புக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் பாராட்டுகளை தெரிவிக்கிறேன். வெற்றி தோல்வியும் போட்டியில் ஒரு அங்கம் எனக்கூறியுள்ளார்.