திமுக தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் இனிப்பு வழங்கினார்
1 min read
M.K. for DMK workers. Stalin served sweets
13.7.2024
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து, சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் திமுக வெற்றி பெற்றது.
இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றியும், தொகுதியில் ஆங்காங்கேயும் திமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினார்கள். அதேபோல், சென்னையில் திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்திலும் திமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, சென்னையில், செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “கள்ளக்குறிச்சி சோக சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை என்ற இந்த இரண்டு மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில், முதல்வர் ஸ்டாலினின் நேர்மையான ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ளனர்.வெற்றி தேடித்தந்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு திமுக வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.