June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

இனி வரும் புயல் அனைத்தும் அதிக வலிமையுடன் இருக்கும்

1 min read

All future storms will be stronger

9.11.2024
கடல் வெப்ப அலை ஏற்படுவதால் வரும் நாட்களில் புயல்கள் வலிமையாகும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிச்சந்திரன் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: கடல் வெப்ப அலைகளால் வரும் காலங்களில் புயல்கள் வலிமை பெற்றதாக மாறும். வெப்பம் அதிகரிப்பால் மேகங்கள் நீரை சுமக்கும் திறன் அதிகரிக்கும். காலநிலை மாற்றத்தால் மேகங்களின் பரப்பளவு குறைந்து அதிக நீரைக் கொண்டதாக உருவாகின்றன. ‘மரைன் ஹீட் வேவ்’ மாதக் கணக்கில் தொடர்கிறது. இதனால் புயல்கள் இனி மிகுந்த வலிமை பெற்றதாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (நவ.,09) அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இரு நாட்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.
நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (நவ.,09) தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவுகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (நவ.,09) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *