யமுனை நீர் விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் கெஜ்ரிவால் பதிலை சமர்ப்பித்தார்
1 min read
Yamuna water issue: Kejriwal submits response to Election Commission
31.1.2025
டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி பிரசாரத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, யமுனை நதியில் அரியானா பா.ஜனதா அரசு நச்சை கலந்து மாசடைய வைத்துள்ளது என்று குற்றச் சாட்டை தெரிவித்தார்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார் தெரிவித்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் இன்று தனது விளக்கத்தை டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சமர்ப்பித்தார். அப்போது அவருடன் டெல்லி முதல்-மந்திரி அதிஷி, பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் ஆகியோர் இருந்தனர். அவர் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-
“எனது கருத்துகள் அரியானாவில் இருந்து டெல்லிக்கு வழங்கப்படும் நீரில் ஆபத்தான அளவில் அமோனியா கலந்திருப்பதுடன் மட்டுமே தொடர்புடையது. விஷம் கலந்தது என்ற எனது முந்தைய கருத்துகள் தண்ணீரில் அமோனியாவின் அளவு அதிகரிப்பதை குறித்து மட்டுமே சொல்லப்பட்டது. இந்த சுற்றுச்சூழல் நெருக்கடியைத் தவிர வேறு எந்த உள்நோக்கமும் அதில் இல்லை. தண்ணீரில் உள்ள அமோனியா அளவு ஜனவரி மாதத்தில், ஒரு லட்சத்தில் 7 பிபிஎம் என்ற அபாய அளவை எட்டியுள்ளது. இது பொதுசுகாதாரத்துக்கு மிகவும் அச்சுறுத்தலானது.
இந்த பிரச்சினை குறித்து அரியானா முதல்-மந்திரியிடம் பலமுறை பேசப்பட்டது. ஆனால் அம்மாநில அரசு இந்த கலப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரியானா அரசின் செயலற்றத்தன்மை நீர் மாசுபாடு நெருக்கடிக்கு வழிவகுத்தது மட்டும் இல்லாமல், தேர்தலுக்கு முன்பாக டெல்லியின் ஆம் ஆத்மி அரசின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் முயற்சியாகவும் இருந்தது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.