முருகன் மாநாடு: கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது
1 min read
Muruga Devotees’ Conference: Started with artistic performances
22/6/2025
உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வேல் யாத்திரை, பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் மலை மீதான சர்ச்சைக்கு பிறகு தமிழ்க்கடவுள் முருகனுக்கு முக்கியத்துவம் அளித்தும், இந்துக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் இன்று முருக பக்தர்கள் மாநாடு பிரமாண்டாக நடைபெறுகிறது.
அந்த வகையில், முருக பக்தர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. மாநாடு நடைபெறும் பாண்டி கோவில் அம்மா திடலில் முருகனின் பிரமாண்ட தோற்றத்துடன் நுழைவு வாயில், திருப்பரங்குன்றம் மலையையும், வேல் ஏந்தியவாறு முருகப்பெருமான் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பது போலவும் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
3 லட்சம் சதுர அடி பரப்பில் 5 லட்சம் பக்தர்கள் அமரும் வகையில் தரை விரிப்புகள் போடப்பட்டுள்ளன. மேலும் முதியோர்கள், பெண்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் அமர 1 லட்சம் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த 2 நாட்களாகவே வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்காணக்கானோர் மதுரை வந்து சேர்ந்தனர். அவர்கள் மதுரையில் பல்வேறு விடுதிகளில் தங்கி மதுரையை சுற்றியுள்ள கோவில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர். இன்று காலை மாநாட்டு திடலில் பக்தர்கள் குவிந்தனர்.