Kerala woman files petition in Supreme Court claiming to be MGR-Jayalalithaa's daughter
14.7.2025 முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள்தான் தான் என கூறி கேரளாவை சேர்ந்த சுனிதா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். டிஎன்ஏ பரிசோதனை செய்ததில்தான் தான் அவருடைய மகள் என்பது தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா இறந்ததை அடுத்து அவரது மகள், மகன் என கூறி அம்ருதா, ஜெயலட்சுமி என நிறைய பேர் வழக்கு தொடுத்தனர். இதையெல்லாம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மறுத்தார். தனது அத்தைக்கு அப்படி யாரும் இல்லை. வேண்டுமென்றே அத்தை மீதான காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சியினர் செய்யும் சதி என குற்றம்சாட்டினார். இந்த பிரச்சினை சில ஆண்டுகள் ஓய்ந்திருந்த நிலையில் கேரளாவை சேர்ந்த சுனிதா என்பவர் ஜெயலலிதாவின் மகள் என கூறி மனு தாக்கல் செய்துள்ளார். கேரளாவை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர்தான் சொல்கிறார். அதிலும் இவர் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள் என கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சுனிதா என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில், எம்ஜிஆர் ஜெயலலிதா 1980 களில் திருமணம் செய்து கொண்டார்கள். அதன் மூலம் நான் பிறந்தேன். அவருடைய சொத்தில் எனக்கு பங்குரிமையை வழங்க வேண்டும். எம்ஜிஆர்- ஜெயலலிதாதான் எனது பெற்றோர் என நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். ஜெயலலிதாவின் சொத்துகள் நிர்வாகம் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுகள் எனது உரிமையை மறுக்கும் விதமாக உள்ளது. இதற்கு ஆதாரமாகதான் டிஎன்ஏ பரிசோதனையை தயாராக வைத்திருக்கிறேன். இவ்வாறு அந்த பெண் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் , "இது கடுமையான மரபு உரிமை விவகாரம், அதை சுமாராக தள்ளுபடி செய்ய முடியாது. ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் விசாரணை மேற்கொள்வோம் என தெரிவித்தார். இதையடுத்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, இது வேண்டுமென்றே செய்யப்படும் திட்டமிட்ட கருப்பு பிரசாரம் என தெரிவிக்கிறார்கள். அதே வேளையில் டிஎன்ஏ சோதனைக்கு முன்வரும் என்றால் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்கிறார்கள்.
இதுகுறித்து சுனிதா செய்தியாளர்களை சந்தித்த போது நான்தான் ஜெயலலிதாவின் மகள். நான் நிறைய முறை போயஸ் தோட்டத்திற்கு சென்று அம்மாவை பார்த்துள்ளேன். சூழல் காரணமாக நான் ரகசியமாக வளர்க்கப்பட்டேன். டிஎன்ஏ சோதனை நடத்தினால் உண்மை தெரியும் என தெரிவித்திருந்தார். ஜெயலலிதா உயிருடன் இல்லாத நிலையில் இப்படி ஆளாளுக்கு மகள் என கிளம்பி வந்த நிலையில் இந்த சுனிதா, ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் வகையில் எம்ஜிஆரையும் தொடர்புபடுத்தி பேசுவதால் அதிமுகவினர் கொந்தளித்துள்ளனர்.