நெல்லை மண்டல பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
1 min read
Tirunelveli Region Professors’ Wait-and-See Protest
29.7.2025
அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு 4 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கும் பணி மேம்பாட்டிற்கான ஊதியம் மற்றும் நிலுவைத்தொகையை உடனே வழங்க வேணடும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மூட்டா மற்றும் ஏ.யூ.டி. அமைப்பு சார்பில், மாநிலம் முழுவதும் 8 மண்டலங்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை முழுநேர காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.
அதன்படி நெல்லை பழைய பேட்டை ராணி அண்ணா கல்லூரி அருகில் உள்ள மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மூட்டா மண்டல தலைவர்கள் விஜய சேவியர் பார்த்திபன், ஆர்தர் டேனியல் ஆகியோர் தலைமை தாங்கினர். பொருளாளர் ராஜ ஜெயசேகர், துணைத்தலைவர் ராஜூ, இணை செயலாளர்கள் சிவஞானம், ஷைலா குமாரி, மண்டல செயலாளர் மகேஷ் ஆகியோர் பேசினர். இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கல்லூரி பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில் வருகிற 7-ந்தேதி சென்னையில் கல்லூரிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு நடத்த இருப்பதாக மூட்டா பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.