June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை- என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு

1 min read

All accused in Malegaon blast case acquitted – NIA court verdict

31.7.2025
மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் 2008-ல் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2008 செப்டம்பர் 29 அன்று மாலேகானின் பிக்கூ சௌக் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த வழக்கில் இந்து வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
குறிப்பாக முன்னாள் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு படை (ATS) விசாரித்து வந்த இந்த வழக்கு 2011-ல் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.

குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக இஸ்லாமியப் பகுதிகளை குறிவைத்து சதித்திட்டம் தீட்டியதாக ATS குற்றம் சாட்டியது.
அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்புக்கு ஆதரவும் வெடிபொருட்களும் வழங்கியதாக லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் மீது குற்றம் சாட்டப்பட்டது.

2018-ல் பிரக்யா சிங் தாக்கூர் 7 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.

323 அரசுத் தரப்பு சாட்சிகள் மற்றும் 8 பாதுகாப்புத் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சுமார் 40 சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்தனர். வழக்கின் இடையில் அண்மையில் தீர்ப்புக்கு முன், நீதிபதி மாற்றப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.பி. உட்பட அனைவரையும் விடுதலை செய்து சிறப்பு NIA நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

குண்டுவெடிப்பில் பலியான 6 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்த அனைவருக்கும் ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் வழக்கிலிருந்து விடுதலையான பிரக்யா சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-
“நான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதில் இருந்து என் வாழ்க்கையை சீரழிக்கும் வகையில் சித்திரவதை செய்யப்பட்டேன்.
17 ஆண்டுகள் துறவற வாழ்க்கை நடத்திய பிறகு மக்கள் என்னை பயங்கரவாதியாகக் கருதினர். நான் துறவியாக இருந்ததால் மட்டுமே உயிர் பிழைத்தேன். இந்த வழக்கில் பகவான் எனக்காகப் போராடினார்.
குறைந்த பட்சம் இந்த நீதிமன்றமாவது என் வாதத்தைக் கேட்டது. காவியை பயங்கரவாதி என்று அழைத்தவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். இந்த வழக்கில் வெற்றி பெற்றது நான் அல்ல, காவி தான். இது இந்துத்துவாவின் வெற்றி”
இவ்வாறு பிரக்யா கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *