மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மோகன் பகவத்தை கைது செய்ய உத்தரவு வந்ததாம்
1 min read
RSS chief Mohan Bhagwat’s arrest warrant issued in Malegaon blast case
Former Anti
1.8.2025
2008, செப்டம்பர் 29 அன்று, மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் ஒரு மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
ஆரம்பத்தில் மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு (ATS) இந்த வழக்கை விசாரித்தது, பின்னர் 2011-ல் NIA -க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 7 குற்றவாளிகள் நேற்று NIA சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபிக்க தவறிவிட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டது.
இந்த தீர்ப்பை அடுத்து காவி பயங்கரவாதம் என்று ஒன்று கிடையாது என்றும் அதை உருவாக்கியதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பாஜக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை கைது செய்ய தனக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படையின் (ATS) முன்னாள் அதிகாரி மெஹிபூப் முஜாவர் தெரிவித்துள்ளார்.
தீர்ப்பை வரவேற்று அவர் கூறியதாவது:-
“நான் அப்போது ATS என்ன விசாரணை செய்தது, ஏன் செய்தது என்று சொல்ல முடியாது. ஆனால், ராம் கல்சங்ரா, சந்தீப் தாங்கே, திலீப் பட்டிதார் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் போன்ற ஆளுமைகள் குறித்து எனக்கு சில ரகசிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
மோகன் பகவத் போன்ற ஒரு உயர்ந்த ஆளுமையை கைது செய்வது என் சக்திக்கு அப்பாற்பட்டது. நான் அந்த உத்தரவுகளைப் பின்பற்றாததால், என் மீது ஒரு தவறான வழக்கு பதிவு செய்யப்பட்டது, அது எனது 40 ஆண்டுகால வாழ்க்கையை அழித்துவிட்டது “
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
“காவி பயங்கரவாதம் என்று எதுவும் இல்லை. அனைத்தும் போலியானது” என்றும் குறிப்பிட்ட அவர் தனது கூற்றுகளுக்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் முஜாவர் தெரிவித்தார்.