June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கிவிட்டனர்: ஐகோர்ட்டு கருத்து

1 min read

Police have exaggerated the issue in the Madurai Aadeenam case: High Court opinion

16.9.2025
சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் சைவ சிந்தாந்த மாநாடு கடந்த மே மாதம் நடந்தது. இதில் கலந்துகொள்ள மதுரை ஆதீனம் காரில் வந்தார். உளுந்தூர்பேட்டை அருகே அவர் காரை மற்றொரு கார் உரசி சென்றது. இதையடுத்து தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளதாகவும், இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளதாகவும் மதுரை ஆதீனம் சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி அளித்தார்.

இவர் மத மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஆதீனத்துக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் முன்ஜாமீன் வழங்கியது.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதீனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அவருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் தரப்பில், விசாரணைக்கு ஆதீனம் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆதீனம் தரப்பில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினாலும், சீருடையில்லாமல் சிலர் வந்து விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘இந்த விவகாரத்தை கண்டுகொள்ளாமல் விட்டு இருந்தால் அப்பவே விவகாரம் முடிந்து போய் இருக்கும். நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த விவகாரத்தில் போலீசார் அரசியல் கண்ணோட்டத்துடன் வழக்குப்பதிவு செய்து பெரிதுபடுத்தியுள்ளனர்’ என்று கருத்து கூறினார்.

பின்னர் ‘இந்த வழக்கின் விசாரணை குறித்த நிலை அறிக்கையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை அக்டோபர் 27-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அதுவரை மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை போலீசார் எடுக்கக்கூடாது‘ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *