June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம்

1 min read

Cough medicine company found guilty of violating rules in Ambalam

12.10.2025
விஷத்தன்மை வாய்ந்த ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து குடித்ததால், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 22 குழந்தைகள் பலியாகி உள்ளனர். அந்த மருந்தை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சீபுரத்தை சேர்ந்த சிரேசன் பார்மா என்ற அந்த நிறுவனத்தில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழக அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்து உள்ளனர்.

இதில் அந்த நிறுவனம் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் தமிழ்நாடு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையில் இருந்து கடந்த 2011-ம் ஆண்டு லைசென்ஸ் பெற்றுள்ள அந்த நிறுவனம், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் தேசிய மருந்து பாதுகாப்பு விதிகளை பலமுறை மீறிய போதிலும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தடையின்றி இயங்கி வந்துள்ளது.

மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழக விதிகளின்படி, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்ற தங்கள் தயாரிப்புகளை ‘சுகம்’ தரவுத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். ஆனால் சிரேசன் பார்மா மருந்து நிறுவனம் தங்கள் தயாரிப்புகள் குறித்து மேற்படி தளத்தில் எதுவும் பதிவு செய்யவில்லை. மேலும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழகத்தின் தரவுத்தளத்தில் இந்த நிறுவனம் எந்த வகையிலும் ஒரு பகுதியாக இருக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டு உள்ளது.

இதைப்போல இந்த விவகாரத்தில் தமிழ்நாடு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மீதும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழக வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

அதிகமான குழந்தைகள் இறந்ததை தொடர்ந்து சிரேசன் பார்மா நிறுவனத்தில் ஆய்வு நடத்துமாறு தமிழ்நாடு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறைக்கு மத்திய பிரதேச அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி கடந்த 1 மற்றும் 2-ந்தேதிகளில் தமிழக அரசு சார்பில் மேற்படி நிறுவனத்தில் தணிக்கை நடந்ததாகவும், அதன் தகவல்களை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுக்கழக அலுவலகத்துக்கு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதைப்போல மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டுக்கழக அதிகாரிகள் சோதனை நடத்தியபோதும், தமிழக மருந்து ஆய்வாளர் ஒருவரை அதில் இணையக்கூறி அழைப்பு விடுத்தும் அவர்கள் பங்கேற்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த பிரச்சினையின் வீரியத்தை கருத்தில் கொண்டு சிரேசன் பார்மா நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்து, அதற்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறைக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழகம் கடந்த 4-ந்தேதி கடிதம் எழுதியுள்ளது.

ஆனால் தமிழக அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மத்திய பிரதேச போலீசார்தான் கடந்த 8-ந்தேதி சிரேசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்ததாகவும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *