மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
1 min read
Supreme Court allows Karnataka to prepare project report for Mekedatu Dam construction
மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது “மேகதாது அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர் ஆணையம் எந்த அனுமதியும் வழங்க இயலாது” என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், “காவிரியின் குறுக்கே போதுமான அணைகள் கர்நாடகாவில் உள்ளன. புதிய அணை தேவையில்லை” எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு புதுச்சேரி, கேரள அரசும் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனையடுத்து மேகதாது அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும் மேகதாது அணை கட்டுமானத்திற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா அனுமதி கோருவதை எதிர்த்து தமிழ்நாடு கூறும் அம்சங்கள் அனைத்தும் மிகவும் ஆரம்ப கட்டமானது.
எனவே, திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய நீர் ஆணையத்திடம் வழங்கும் போது, தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றிடம் கருத்து கேட்ட பிறகே முடிவு எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை வழங்கவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்பதை தெளிவுபடுத்துகிறோம் என்றும் மேகதாது தொடர்பாக தற்போது சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுகின்றன என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
முன்னதாக மேகதாது அணை திட்டம் தமிழகத்தை பாதிக்காது என்றும் காவிரி நீரை திறந்து விடுவதில் சமநிலைப்படுத்தும் நோக்கில் மேகதாதுவில் புதிதாக அணை கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.