பாராளுமன்ற கூட்டுக்குழு விவாதத்திற்கு அனுப்பப்படும் ‘விக்ஷித் பாரத் சிக்ஷா ஆதிக்ஷன் மசோதா’!
1 min read
‘Vikshit Bharat Shiksha Adhikshan Bill’ to be sent for discussion by a joint committee of Parliament!
15.12.2025
விக்ஷித் பாரத் சிக்ஷா ஆதிக்ஷன் மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழு விவாதத்திற்கு அனுப்பி வைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் கலைத்துவிட்டு, அவை அனைத்தையும் ஒரே ஆணையத்திற்கு கீழ் கொண்டு வருவதற்கான இந்த புதிய மசோதாவை நேற்று மக்களவையில் மத்திய கல்வித் துறை அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார். இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவது சம்பந்தமான விவாதம் மக்களவையில் நடைபெற்ற போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த மசோதா மூலம் ஹிந்தியை மறைமுகமாக தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு திணிக்க முற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதனைத்தொடர்ந்து மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு விவாதத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்திருப்பதாக மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். இதுகுறித்து சபாநாயகர் முடிவெடுப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இந்த புதிய மசோதா இந்திய கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும். தற்போது உள்ள பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) மற்றும் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (NCTE) ஆகியவற்றுக்குப் பதிலாக, ஒரே ஒரு உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படும். இருப்பினும், மருத்துவ மற்றும் சட்டப் படிப்புகள் இந்த புதிய அமைப்பின் வரம்பிற்குள் வராது. இந்த மசோதா எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரிடமிருந்தும் எதிர்ப்புகளை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு ‘இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா’ என்று அழைக்கப்பட்ட இது, தற்போது ‘விக்ஸித் பாரத்’ என்ற பெயருடன் மறுஅறிமுகம் செய்யப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை 2020யின் (NEP) பரிந்துரைப்படியே இந்த மாற்றம் கொண்டுவரப்படுகிறது.