குற்றாலம் பகுதியில் கனமழை-மெயின் அருவியில் குளிக்க தடை
1 min read
Heavy rain in Courtallam area – bathing prohibited in Main Falls
13.1.2026
தென்காசி மாவட்டத்தில் நேற்று பெய்த கன மழையினால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையினால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வெள்ளமெனக் கொட்டியதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று குறைந்த சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து வருகிறார்கள்.
பழைய குற்றாலம் அருவியில் ஏற்கனவே பெய்த மழையினால் ஏற்பட்ட சேதங்களை வனத்துறையினர் இதுவரை சீரமைக்காததால் சுற்றுலாப் பயணிகள் பழைய குற்றாலம் பகுதிக்கு அனுமதிக்கப் படவில்லை.
ஏற்கனவே குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள்,பொதுமக்கள் குளித்து வந்த தேனருவி, செண்பகாதேவி அருவி, பழத்தோட்ட அருவி, உள்ளிட்ட அருவிகளை வனத்துறையினர் கையகப்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தினார்கள். அதைப் போலவே இப்போது பழைய குற்றாலம் அருவியையும் வனத்துறையினர் கையகப்படுத்தியதோடு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை குளிக்க முடியாத நிலையை உருவாக்கி வருகிறார்கள். இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டால் சீரமைப்பு பணிகளை முடியவில்லை என்கிறார்கள்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பழைய குற்றாலம் பிரச்சனையில் தலையிட்டு வழக்கம் போல் பொதுப்பணித்துறை மற்றும் ஆயிரப்பேரி ஊராட்சி மூலம் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு பொதுமக்கள் குளிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். என்று சமூக ஆர்வலர்கள், அய்யப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.