August 25, 2026

Seithi Saral

Tamil News Channel

ஒருதாய் வயிற்றில் ஒரே நேரத்தில் பிறந்த நால்வர்- பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்

1 min read

Four children born at the same time in Kerala to take Plus Two exams

4.3.2026
கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (5-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை நடக்கிறது. அதேபோல் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நாளை மறுநாட்கள் (6-ந்தேதி) தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 4 லட்சத்து 18 ஆயிரத்து 516 மாணவ-மாணவிகளும், பிளஸ்-2 பொதுத்தேர்வை 4 லட்சத்து 52 ஆயிரத்து 437 மாணவ-மாணவிகளும் எழுத உள்ளனர்.

பிளஸ்-2 பொதுதேர்வு மொத்தம் 1,984 மையங்களில் நடைபெறுகிறது. தேர்வு கண்காணிப்பு பணியில் 29 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ளதால் அந்த வகுப்பு மாணவ-மாணவிகள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

அதேபோல் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவ-மாணவிகளும் இறுதிக் கட்டமாக பாடங்களை படித்து வருகின்றனர். கேரளாவில் நடக்க உள்ள பிளஸ்-2 பொதுத் தேர்வை ஒரே பிரசவத்தில் பிறந்த நால்வர் எழுதுகின்றனர். அவர்கள் 4 பேரும் ஒரே நேரத்தில் பொதுத்தேர்வை எதிர்கொள்கின்றனர். அது பற்றிய விவரம் வருமாறு:-

கொல்லம் மாவட்டம் ஓச்சிரா அருகே உள்ள புத்தன்புரா பகுதியை சேர்ந்த தம்பதி சுனில் குமார்-ரேகா. இந்த தம்பதிக்கு திருமணமாகி 9 ஆண்டுகளுக்கு பிறகே குழந்தை பிறந்தது. அதிலும் ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை என 4 குழந்தைகள் பிறந்தனர்.

அவர்கள் 4 பேரும் கடந்த 2008-ம் ஆண்டு மே 17-ந்தேதி பிறந்தனர். அவர்களில் ஆண் குழந்தைகளுக்கு அனந்த கிருஷ்ணன், கோபி கிருஷ்ணன், ராஜ் கிருஷ்ணன் என்று பெயர் சூட்டினர். பெண் குழந்தைக்கு கோபிகா கிருஷ்ணன் என்று பெயர் வைத்தனர்.

திருமணமாக பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்ததை சுனில்குமார்-ரேகா தம்பதியினர் பெரும் பாக்கியமாக கருதினர். இதனால் 4 குழந்தைகளையும் எந்த வேறுபாடும் இல்லாமல் பாசம் காட்டி வளர்த்தனர்.

ஒரே நேரத்தில் 4 குழந்தைகளையும் வளர்க்க பல்வேறு சிரமங்களை அவர்கள் சந்தித்தனர். இருந்தபோதிலும் அதனை மகிழ்வாக எடுத்துக்கொண்டு 4 குழந்தைகளையும் வளர்த்தனர். அவர்களை சிறு வயது முதலே ஒரே பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். அவர்கள் 4 பேரும் சிறு வயது முதல் 10-ம் வகுப்பு வரை, தங்களின் வீட்டின் அருகே உள்ள பள்ளியில் படித்தனர்.

ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் சேர்ந்து படித்தனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ஒன்று போலவே எழுதினர். அதில் அனைவரும் தேர்ச்சி பெற்று 11-ம் வகுப்புக்கு சென்றனர். 4 பேரில் அனந்த கிருஷ்ணன் எதிர்காலத்தில் பி.காம் படிக்க விரும்பியதால், வணிகவியல் பாடத்தை தேர்வு செய்தார்.

மற்ற 3 பேரும் எதிர்காலத்தில் பி.டெக் படிக்க விரும்பியதால் கணிணி அறிவியலை தேர்வு செய்தார்கள். இதனால் 10-ம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் படித்து வந்தவர்கள், 11-ம் வகுப்பில் வேறு வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அனந்த கிருஷ்ணனை தவிர மற்ற 3 பேரும் ஒரே வகுப்பில் படித்தார்கள். ஆனால் ஒரே பள்ளியில் தான் படித்தனர்.

இந்தநிலையில் அவர்கள் 4 பேரும் தற்போது ஒரே நேரத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுத உள்ளனர். அவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற இலக்குடன் தீவிரமாக படித்து வருகின்றனர்.

கோபிகா கிருஷ்ணன், கோபி கிருஷ்ணன், ராஜ் கிருஷ்ணன ஆகிய 3 பேரும் ஒரே பாடப்பிரிவு என்பதால் சேர்ந்து படிக்கின்றனர். அனந்த கிருஷ்ணன் வணிக வியல் பிரிவு என்பதால் அவர் மட்டும் தனியாக படிக்கின்றார்.

ஒரே நேரத்தில் பொதுத் தேர்வு எழுதும் நால்வருக்கு, அவர்கள் வசித்துவரும் வீடு இருக்கக்கூடிய பகுதியை சேர்ந்தவர்கள், உடன் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *