டெல்லி புறப்பட்ட விஜய் பையில் கத்தரிக்கோல் – விமான நிலையத்தில் பரபரப்பு
1 min read
Scissors found in Vijay’s bag after leaving for Delhi – stir at the airport
14/3/2026
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 12, 19 ஆகிய 2 தேதிகளில் ஆஜரானார். அவரிடம் கரூர் கூட்டநெரிசல் குறித்து பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் எழுப்பினர். அந்த கேள்விகளுக்கு விஜய் பதில் அளித்தார்.
அதேவேளை, கரூர் கூட்டநெரிசல் வழக்கில் கடந்த 10ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மீண்டும் ஆஜராகும்படி விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், வேறு பணிகள் இருப்பதால் அன்றைய தினம் ஆஜராக முடியாது என விஜய் தரப்பில் கூறிய நிலையில் 15ம் தேதி ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியது.
இதையடுத்து, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக தலைவர் விஜய் நாளை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ளார். இதற்காக அவர் இன்று மாலை சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
முன்னதாக, சென்னை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய் இடம் விமான நிலையத்தில் பாதுகாப்புப்பணியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்புப்படையினர் சோதனை நடத்தினர். அப்போது விஜய் கொண்டுவந்த பையில் கத்தரிக்கோள் இருந்ததை பாதுகாப்புப்படையினர் கண்டுபிடித்தனர். இதனால் விஜய் தான் செல்லவிருந்த தனிவிமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டார். பின்னர், கத்தரிக்கோல் இருப்பதை கவனிக்கவில்லை என்று விஜய் தெரிவித்ததையடுத்து கத்தரிக்கோலை பறிமுதல் செய்த பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனைக்குப்பின் தனிவிமானத்தில் விஜய்-ஐ அனுமதித்தனர். இதையடுத்து விஜய் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்படது.