தென்காசி கலெக்டர் அலுவலகம் இதுவரை திறக்காதது ஏன்?- ராம உதயசூரியன் விளக்கம்
1 min read
Why hasn’t the Tenkasi Collector’s Office opened yet? – Rama Udayasuriya explains
18.3.2026
தென்காசியில் ரூபாய் 119 கோடி செலவில் கட்டி முடிக்கப் பட்ட கலெக்டர் அலுவலகம் திறக்கப் படாதது ஏன் என்பது பற்றி சமூக ஆர்வலர் இராம.உதயசூரியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசியில் ரூபாய் 119 கோடி செலவில் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணிகள் கடந்த 2020-ஆண்டுதொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்த வேளையில் 2022-ஆண்டு திருநெல்வேலியை சார்ந்த வழக்கறிஞர் முத்துராமன் அவர்கள் தொடர்ந்த வழக்கில் சுற்றுச்சூழல் அனுமதியை பெற்று பணியை தொடர சென்னை உயர் நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு பிறப்பித்தது.
பொதுப்பணித்துறை நான்கு வாரங்கள் அவகாசம் வேண்டும் என்ற வேண்டு கோளை ஏற்று இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துவிட்டது.
அதன் பின் எடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகளை பொதுப் பணித்துறையும் சுற்றுச்சூழல் துறையும் எடுக்காததே இந்த அலுவலகத்தை திறக்கமுடியாமல் போனதற்கு காரணம். எஸ்இஐஏஏ என்று சொல்லப்படும் சுற்றுச்சூழல் துறையின் கமிட்டி ஆய்வு மேற்கொண்டு அதில் ரூ 59-லட்சத்திற்கான இழப்பீடுகள் இருப்பதாக கண்டறிந்து அந்த பணத்திற்கான வங்கி உத்திரவாதம் பொதுப்பணித்துறையால் வழங்கப்பட்ட பின்னரும் அதனை ஏற்றுக் கொண்டு அனுமதி அளித்திருக்க வேண்டிய சுற்றுச்சூழல் துறை வேண்டுமென்றே காலம் கடத்தி கடைசியாக 2023ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வனசத்தி என்பவர் தொடர்ந்த வழக்கை காரணம் காண்பித்து இன்றுவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறக்க அனுமதி மறுத்து வருகிறது.
இந்த முரண்பட்ட நடவடிக்கையை விலக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறக்க சமூக ஆர்வலர் இராம.உதயசூரியன் எடுத்த நீதிமன்ற நடவடிக்கைக்கு பொதுப்பணித்துறையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்து அது விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.
அப்போது 2023-நீதிமன்ற நடவடிக்கையை காரணம் காட்டி 2022 தீர்ப்பை செயல்படுத்தாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பதாகும் என்ற நமது தரப்பு வாதத்தை முன் வைக்க இருக்கிறோம். அதுசமயம் நீதிமன்றம் நமது கோரிக்கையை பரிசீலிக்கும் போது ஆட்சியர் அலுவலக திறப்பிற்கான உத்தரவு கிடைக்கும் என நம்புகிறேன். இவ்வாறு சமூக ஆர்வலர்
இராம உதயசூரியன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.