கூட்டணி பற்றி பொய்யான பிரசாரம் – த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு
1 min read
False propaganda about alliance – T.R.C. Leader Vijay’s speech
18.3.2026
த.வெ.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. அதில் த.வெ.க. தலைவர் விஜய் இஸ்லாமியர்களுடன் கலந்து கொண்டார். அதன்பிறகு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்து கொண்ட விஜய், நிகழ்ச்சியின் இறுதியில் உரையாற்றினார். அப்போது அவர் தனக்கு எதிராக பரப்பப்படும் வதந்திகள் குறித்து விளக்கம் அளித்தார்.
இது குறித்து அவர் பேசியதாவது:-
“நாம் அரசியலுக்கு வந்ததில் இருந்தே, நம்மை பற்றி நிறைய வதந்திகள் அவர் இந்த டீம், அந்த டீம் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், இவர் எந்த டீமும் கிடையாது, மக்களுடைய டீம். அப்படி என எல்லாருக்கும் தெரிந்த பிறகு வேற என்ன அவதூறு கிளப்பலாம் என முயற்சித்து அவர்களுக்கு எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை.
கடைசியில இந்த விஜயை என்னதான் பண்ணலாம்? அப்படி என நினைக்கும் போதுதான் இந்த கூட்டணி, அந்த கூட்டணி சேரப்போகிறார் என்று பொய்யான பிரசாரத்தை பண்ணி கொண்டு இருந்தார்கள். இந்த செய்தி எல்லாம் கேட்டு நீங்க கொஞ்சம் குழம்பி இருப்பீர்கள். அதனால் இங்க மறுபடியும், ஓபனாக, தெளிவாக ஒரு விஷயம் சொல்கிறேன்.
நான், நாங்க எப்பவுமே மதச்சார்பற்ற கொள்கை, மதச்சார்பற்ற சமூகநீதி என்ற அந்த நிலைப்பாட்டில் எப்போதும் சமரசம் வைத்துக் கொள்ள மாட்டோம். நமது தலைமையில் தான் ஆட்சி அப்படி என்பதில் உறுதியாக இருக்கிறோம். நமது முதல் மாநாட்டில் கூட அரசியலில் யாருக்காகவும், எதற்காகவும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி இருந்தேன். அதற்கான பேச்சுவார்த்தையும் கிடையாது.
யார் என்ன அவதூறு பரப்பினாலும், தயவு செய்து அதை நம்பாதீர்கள். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நாம் நினைத்த இலக்கை நம்மால் நிச்சயமாக அடைய முடியும். இன்று எனது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது ரமலான் நல் வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்,”
இவ்வாறு அவர் பேசினார்.