தூத்துக்குடியில் சீட் மறுப்பு- த.வெ.க. கொடியை கழற்றி வீசிய அஜிதா ஆக்னல்
1 min read
Seat denial in Thoothukudi – Ajitha Agnel removes TDP flag and throws it away
29.3.2026
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் நடவடிக்கையை துரிதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று அறிவித்தார். இதில் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளார். இதை தொடர்ந்து அவர் நாளை முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில், விஜயின் நண்பர் ஸ்ரீநாத் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்தவர் அஜிதா ஆக்னல். இவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பனையூரில் விஜய்யின் காரை மறித்து போராட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கும் முயற்சி செய்தார்.
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது விஜய் அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில் அஜிதா ஆக்னல் பெயர் இடம்பெறாத காரணத்தால் தூத்துக்குடியில் அவரது ஆதரவாளர் ஒருவர் தனது காரில் இருந்த த.வெ.க. கொடி மற்றும் சின்னமான விசிலையும் கழற்றி வீசியுள்ளார்.