‘திமுக ஆட்சியில் 18 ஆயிரம் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை’ -எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
1 min read
‘18,000 children were sexually abused during DMK rule’ – Edappadi Palaniswami’s speech
1.4.2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சிவகங்கை மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் மற்றும் காரைக்குடி தொகுதி அமமுக வேட்பாளர் தேர் போகி பாண்டி ஆகியோரை ஆதரித்து இபிஎஸ் வாக்கு சேகரித்தார். அவர் பேசியதாவது:-
“எடப்பாடி பழனிசாமி சங்கியாக மாறிவிட்டார் என்கிறார் ஸ்டாலின். அவதூறு கருத்தை சொல்கிறார். தோல்வி பயத்தால் காங்கிரஸ் காலை பிடித்து கெஞ்சி கூத்தாடி கூட்டணி வைத்திருக்கிறீர்கள். கருணாநிதி கூட்டணி வைத்தாரே, அவர் சங்கியா?
அண்மையில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் பிரச்னை. கனிமொழி டெல்லிக்கு சென்று பார்த்தார். அப்படினா ஸ்டாலின் சகோதரி கனிமொழி சங்கியா? உங்கள் பதவிக்கு தக்கவாறு பேசி பழகுங்கள் எங்கள் தொண்டன் பேசத் தொடங்கினால் செவி கிழிந்துவிடும்.
இபிஎஸ் கையில் ரத்தக்கறை படிந்திருக்கிறதாம், புதிதாகக் கண்டுபிடித்திருக்கார், என் கை சுத்தமாக இருக்கு பாருங்கள். ஸ்டாலின் ஆட்சியில் 18 ஆயிரம் குழந்தைகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளர்.
சுமார் 6000 பேருக்கு போக்சோவில் வழக்கின் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. சமூகநலத்துறை அமைச்சர் 6999 போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு 84 கோடி நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது என்கிறார். இது ஒரு அமைச்சர் கொடுத்த வாக்குமூலம். இத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 18 ஆயிரம் குழந்தைகள் அப்பா அப்பா என்று கதறுவது உங்கள் செவிக்கு எட்டவில்லையா? திமுக ஆட்சி நிர்வாகத்தில் சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை.
அவதூறு பிரசாரத்தை மேலும் தொடர்ந்தால் எங்கள் தொண்டர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.”
இவ்வாறு அவர் பேசினார்.