மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்: மு.க.ஸ்டாலின் பதிவு
1 min read
We bow our heads and accept the verdict of the people: Chief Minister Stalin
4.5.2026
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலின் தோல்வி அடைந்தார். இந்த சூழலில் சமூகவலைதளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழகத்தை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே ஓட்டுகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு ஓட்டு கேட்டு நாங்கள் பிரசாரம் செய்தோம். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து ஓட்டளித்த தமிழக மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த கட்சியினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி; எங்களோடு தோளோடு தோள் நின்ற கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி; எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே லட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான். அதனால் திமுகவின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. – இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.