கடையத்தில் பைக் மீது மினிலாரி மோதி முதியவர் பலி
1 min read
Elderly man dies after mini-lorry hits bike in Kadayam
26/5/2026
தென்காசி மாவட்டம் கடையத்தில் இன்று காலை பைக் மீது செங்கல் ஏற்றி வந்த மினிலாரி மோதியதில் பைக்கில் வந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி சப்பாணி கோயில் தெருவை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 64). இவர் இன்று 26.05.2026 அன்று காலை 7.30 மணியளவில் தனியார் கல்லூரியில் வேலை பார்க்கும் தனது மகன் சேது நாகராஜனை கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி பேருந்தில் ஏற்றி அனுப்பி விட்டு மீண்டும் ஆழ்வார்குறிச்சி செல்வதற்காக பைக்கில் சாலையை கடந்தார்.
அப்பொழுது எதிரே செங்கல் ஏற்றி வந்து கொண்டிருந்த மினிலாரி பழனியாண்டியின் பைக் மீது மோதியது. மினிலாரியின் அடியில் பைக்குடன் சிக்கிகொண்ட பழனியாண்டி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார். இதில் படுகாயமடைந்த பழனியாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்த கடையம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மினிலாரி ஓட்டுநரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.