June 24, 2026

Seithi Saral

Tamil News Channel

பர்ஸ்ட் லுக் போஸ்டர் விழாவில் ரஜினி பேச்சு

1 min read

Rajini’s speech at the first-look poster launch event

24.6.2026
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது படத்தின் பெயர் ‘தர்மன்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விழா இன்று சென்னையில் நடந்தது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளை முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக தனது 173-வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்பட்ட இந்தப் படத்தை முதலில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் சுந்தர்.சி இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் அவர் விலகியதால், ‘டான்’ படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
பின்னர் அவரும் இந்த படத்தில் இருந்து விலகிய நிலையில், ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்க ஒப்பந்த செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். மேலும், பிரபல இயக்குநர் ஷங்கர் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், மலையாள நடிகர் பாசில் ஜோசப் ரஜினிகாந்தின் மகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், ‘தலைவர் 173’ படத்தின் டைட்டில் இன்று (ஜூன் 24) வெளியிடப்பட்டது. இதன்படி, இந்த படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், ரஜினிகாந்த் பேசியதாவது:-

நம்ம பேசாமலேயே இருந்தால், வாயில் என்ன கொழுக்கட்டை வைத்திருக்கியா என்பார்கள், பேச ஆரம்பித்தால், இப்போ பேசு என கூறுவார்கள். பேசிவிட்டால், நீ பேசாமலே இருந்திருக்கலாம் என கூறுவார்கள்.. உஷாராக இருக்க வேண்டும், நம்மை பிடிக்காதவர்களுக்கு, என்ன செய்தாலும் பிடிக்காது. நம்மை பிடிக்கும் என்பதால், நாம் எது செய்தாலும் பிடிக்கும் என நினைப்பதும் முட்டாள் தனம்.

இவ்வாறு அவர் கூறினார்.
ரஜினிகாந்தின் இந்த பேச்சு யாருக்கானது என்று சமூக வலைதளங்களில் தற்போது விவாத பொருளாகி உள்ளது. முதல்-அமைச்சர் விஜய் வாய் திறந்து பேச மாட்டேங்கிறார். வாயை திறங்க சி.எம் சார்… என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர். நேற்று சட்டசபையில் கவர்னர் உரை மீதான பதிலுரையில் முதல்-அமைச்சர் விஜய் பேசினார். அது பல்வேறு சர்ச்சையாகி, விவாத பொருளாகிவிட்டது.

இந்நிலையில் விழாவில் ரஜினிகாந்த் பேசியது, முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆதரவாகவும், அவருக்கு அறிவுரை கூறியதாக இருப்பது போல் அமைந்துள்ளதாக, அரசியல் விமர்சர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

சட்டசபை தேர்தலுக்கு முன்னர், நடிகர் பின்னால், இளைஞர்கள் செல்வது ஆபத்து என ரஜினிகாந்த் பேசியது, முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக இருந்தது. அந்த பேச்சு, திமுகவுக்கு ஆதரவு தந்ததாக பேசப்பட்டது. ரஜினிகாந்த் பேசும்போதெல்லாம் பொடி வைத்து பேசுவது, சர்ச்சையில் முடிகிறது என்றும் கருத்துகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *