பொன்முடிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு
1 min read
Case against former Minister Ponmudi – High Court refuses to quash it.
2.7.2026
கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில பேசியதாக புகார்கள் எழுந்தன.
பொன்முடியின் பேச்சு மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருப்பதாகவும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த புகாரை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பொன்முடி தரப்பில சென்னை ஐகோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த சீராய்வு மனு ஏற்கனவே நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அந்த விசாரணையின்போது பொன்முடி தரப்பில், மூடிய அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பேச்சு தொடர்பாக இந்த புகார் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு அரசின் அனுமதியை பெறவில்லை. அதனால் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது” என்று வாதிடப்பட்டது.
தொடர்ந்து புகார்தாரரான உமா ஆனந்தன் தரப்பில், “இதே விவகாரத்தில ஏற்கனவே ஐகோர்ட்டு தாமாக முன்வந்து ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அப்போது பொன்முடிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், அவருடைய பேச்சால் பொது அமைதிக்கு எந்த ஒரு குந்தகமும் வரவில்லை என்று கூறி அவருக்கு எதிரான புகார்கள் முடித்து வைக்கப்பட்டன. ஆனால் தற்போது பொன்முடிக்கு எதிராக வழக்கு தொடர அரசிடம் அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது. அதனால இவர் இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றச்சாட்டுக்கு முகாந்தரம் இல்லை என்று கோர்ட்டில்தான் நிரூபிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இளந்திரையன், வழக்கை ரத்து செய்யக் கோரிய பொன்முடியின் மனுவை ஏற்க மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.