ஈரான் பயணம் வேண்டாம் என்று இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
1 min read
Central government advises Indians against traveling to Iran.
20.7.2026
ஈரானில் அதிகரித்து வரும் நிலையற்ற சூழல் காரணமாக, அங்கு செல்வதைத் தள்ளிவைக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
ஈரானில் நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் மோதல்கள் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு சூழல் சீரடையும் வரை அங்கு செல்வதை தள்ளிவைக்குமாறும், ஏற்கனவே அங்கு இருப்பவர்கள் கிடைக்கக்கூடிய வணிக ரீதியான விமான சேவைகள் மூலம் வெளியேறுவது குறித்து பரிசீலிக்குமாறும் இந்திய குடிமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
திருத்தப்பட்ட பயண வழிகாட்டுதலில், “சமீப நாட்களாக ஈரானில் நிலையற்ற தன்மை மற்றும் மோதல்கள் அதிகரித்துள்ளன என்றும், இதனால் இந்திய குடிமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியது.
எந்தவொரு நோக்கத்திற்காகவும் ஈரானுக்கு செல்ல திட்டமிடும் இந்திய குடிமக்கள், பாதுகாப்பு சூழல் சீரடையும் வரை தங்கள் பயணத்தை தற்காலிகமாக தள்ளிவைக்க வேண்டும். அவர்கள் நிலவரத்தை முழுமையாக அறிந்துகொள்ள செய்திகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
மேலும் நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகள் போன்ற அதிக இராணுவ நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளது.
ஏற்கனவே ஈரானில் உள்ள இந்தியர்கள், கிடைக்கக்கூடிய விமான சேவைகளைப் பயன்படுத்தி தற்காலிகமாக அங்கிருந்து வெளியேறுவது குறித்து பரிசீலிக்குமாறும் அது அறிவுறுத்தியது. ஈரானிலேயே தொடர்ந்து இருக்க முடிவு செய்பவர்கள் “மிக உயர்ந்த அளவிலான எச்சரிக்கையுடன்” இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று தூதரகம் கூறியது.
உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் இந்தியக் குடிமக்களைத் தூதரகம் வலியுறுத்தியது.
தூதரகத்தில் இதுவரை பதிவு செய்யாத ஈரானில் உள்ள அனைத்து இந்தியர்களும் உடனடியாக பதிவு செய்துகொள்ளுமாறும், கூடுதல் தகவல்களுக்கு தூதரகத்தின் இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களைத் தொடர்ந்து கவனிக்குமாறும் அது கேட்டுக்கொண்டது.
பிராந்திய பதற்றங்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்ததை தொடர்ந்து ஈரானில் ஏற்பட்டுள்ள புதிய பாதுகாப்பு கவலைகளுக்கு மத்தியில் இந்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், மேற்கு ஆசியா முழுவதும் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளை ஈரான் தாக்கியுள்ளது.
மேற்கு ஆசியாவில் மோதல்கள் தீவிரமடைந்த காலங்களில் இந்தியா இதற்கு முன்பும் இதேபோன்ற வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது; மேலும் உதவிக்கு தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
உதவி தேவைப்படும் குடிமக்களுக்காக அவசர உதவி எண்களையும் இந்திய தூதரகம் பகிர்ந்துள்ளது.