சென்னை பல்கலைக்கழக இறுதி தேர்வை வீட்டில் இருந்தே எழுதலாம்
1 min readChennai University final exam can be written from home
15-9-2020
சென்னை பல்கலையுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் இறுதி செமஸ்டர் தேர்வுகளை வீட்டில் இருந்தே எழுதி அனுப்பலாம் என்று சென்னை பல்கலை அறிவித்துள்ளது.
செமஸ்டர் தேர்வு
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் இறுதியாண்டு தவிர அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு ரத்து செய்ய யுஜிசி ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்த நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. ஆனால், அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் தேர்வு எழுதுவதற்கான வசதிகள் இல்லை என கூறப்பட்டு வந்தது.
வீட்டில் இருந்தே….
இதனை அடுத்து சென்னை பல்கலைக்கழகம் தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆன்லைன் வழி தேர்வுகள் கிடையாது என்றும் மாணவர்கள் வீட்டில் இருந்த படி ஏ4 தாளில் தேர்வு எழுதி கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற அனைத்து தனியார் கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களும் இந்த புதிய முறையில் செமஸ்டர் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்போனில் வினா
செமஸ்டர் தேர்வுகளை வீட்டில் இருந்தபடியே எழுதி, இறுதி விடைத்தாள்களை ஸ்பீட் போஸ்ட் மூலம் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கலாம் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
விடை எழுதும் ஏ4 தாள்களின் ஒவ்வொரு பக்கத்திலும் மாணவர்களின் பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு 18 தாள்களுக்கு மிகாமல் எழுதி அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் 11 மணி வரை, பகல் 2 மணி முதல் 3 மணி வரையும் என ஒவ்வொரு தேர்வும் 90 நிமிடங்களுக்கு நடைபெற உள்ளது.
வினாத்தாள் தரவிறக்க இணைப்பு அந்தந்த மாணவர்களின் செல்போன் நம்பருக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேற்கண்ட தகவலை சென்னை பல்கலைக்கழம் அறிவித்துள்ளது.