சத்துணவு பணியாளர் தேர்வு நிறுத்தப்பட்டது ஏன்?
1 min readWhy was the nutrition staff selection stopped?
10/10/2020
தமிழ்நாட்டில் சத்துணவு பணியாளர் தேர்வு நிறுத்தப்பட்டதற்கு என்ன காரணம் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.
சத்துணவு திட்டம்
பெருந்தலைவர் காமராஜர் கொண்டுவந்த மதிய உணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். விரிவு படுத்தி சத்துணவு திட்டமாக மாற்றினார். இந்த திட்டம் தொடங்கப்பட்டபோது அந்தந்த தலைமை ஆசிரியரே அந்த சத்தணவு பணகளையும் கவனிக்க வேண்டும். ஆனால் அவர்கள் சமையலாளர் மற்றும் உதவியாளரை நியமித்துக் கொள்ளலாம் என்று இருந்தது.
சத்துணவு பொறுப்பை கவனிக்க தங்களுக்கு கூடுதலாக அலவன்ஸ் வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்.
அப்போது முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். சத்துணவு அமைப்பாளர் என்ற பகுதிநேர பணியை உருவாக்கி அதற்கு தனியாக பணியாளர்களை நியமித்தார்.
ரூ.150 சம்பளம்
1984ம் ஆண்டு இப்பணி உருவாக்கப்ட்டபோது சத்துணவு அமைப்பாளர்களுக்கு மாதம் ரூ.150 சிறப்பூதியமாக வழங்கப்பட்டது. அது பகுதி நேர ஊழியர் என்றாலும் மாலை காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை பள்ளிக்கூடத்தில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு திருக்குறள் வகுப்பு நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இதனை அடுத்து பல்வேறு போராட்டத்திற்கு பிறகு 1995ம் ஆண்டு சத்துணவு அமைப்பாளர்களுக்கு மாதம் ரூ.300 ஆக சம்பளம் உயர்ந்தது.
அதபின் அடிப்படை சம்பளம் முறை அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதன்பின்னர்தான் அவர்களுக்கு சம்பளம் ஓரளவு கணிசமாக கிடைத்தது. தற்போது சாதாரணமாக ஒரு சத்துணவு அமைப்பாளர் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். உள்ளூரில் வேலை என்பதால் இந்த வேலைக்கு போட்டி அதிகமாக உள்ளது.
பதவி உயர்வு
மேலும் பால்வாடியில் வேலைபார்த்த பெண்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அவர்கள் ஊர் நல அலுவலர் அதன்பின் சமூக நல விரிவாக்க அலுவலர் என பதவி உயர்வு பெற்றுவிடுவார்கள். அந்த பதவி உயர்வு தற்போது சத்துணவு அமைப்பாளராக வேலை பார்க்கும் பெண்களுக்கும் வழங்கப்படுகிறது.
ஊர்நல அலுவலருக்கு அடிப்படை சம்பளம் உள்பட மொத்தம் 21 ஆயிரம் ரூபாய் வரை வாங்குவார்கள். அதன்பின் பதவி உயர்வு பெற்று சமூகநல விரிவாக்க அலுவலராக ஆகிவிட்டால் 44 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்.
இதன் காரணமாக சத்துணவு அமைப்பாளர்கள் பதவிக்கு தனி மவுசு கூடிவிட்டது. எப்படியாவது அந்த வேலையை பெற்றுவிட வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். குறிப்பாக பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
நிறுத்தம்
தற்போது தமிழ்நாடு முழுவதும் சத்துணவு பணியாளர்( அமைப்பாளர், சமையலாளர், உதவியாளர்) பதவிக்கு ஆள் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்தில் 1000 முதல் 1200 வரை காலியிடங்கள் உள்ளன. இதில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த நிலையில் இந்தப் பணிக்கு ஆள்களை தேர்வு செய்யும் பணி திடீரென்று நிறுத்தப்பட்டு உள்ளது. இது பற்றி கடந்த 8-ந் தேதி மக்கள் செய்தி துறை இயக்குனர் அறிவித்துள்ளார். அதில் இந்த பணிகளுக்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாலும், நேர்காணல் முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதால் கூட்டம் அதிகமாக கூடும் என்பதாலும் கொரோன பரவல் உள்ள நேரத்தில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தேர்வு நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது அரசு தரப்பி அறிவிக்கப்பட்டாலும் இந்த நிறுத்தத்திற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.
லஞ்சம்
இந்த வேலையில் வேலையில் எப்படியும் சேர்ந்து விட வேண்டும் என்று பலர் குறுக்குவழியை நாடுவதாக கூறப்படுகிறது. அதாவது சில அரசியல்வாதிகளை படித்து அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து எப்படியாவது இந்த வேலையை பெற்றுவிட முனைந்தார்கள். அமைப்பாளர் வேலைக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வாங்க பேரம் பேசப்பட்டதாக சிலர் கூறுகிறார்கள். இந்த பேச்சு சாதாரண மக்கள் வரை பேசப்பட்டது.
இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் வர உள்ளது. இந்த நிலையில் இந்த பணிக்கு ஆட்களை நியமித்தால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று கருதப்பட்டது. வீணாக ஒரு கெட்டப்பெயரை அரசு சம்பாதிக்க விரும்ப வில்லை என்றும் அதனால்தான் இந்த தேர்வை நிறுத்திவிட்டது என்று கூறப்படுகிறது.
இந்த பணிக்காக தேர்வு ஏற்கனவே மூன்று முறை அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.