மாஸ்டர் பட விவகாரம் : முதல்-அமைச்சருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு
1 min readMaster Image: Actor Vijay’s meeting with the cheef Minister
28-12-2020
மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் இன்று திடீரென்று சந்தித்து பேசினார்.
மாஸ்டர்
நடிகர் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டார். பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் இது. இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். விஜய் தவிர விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.
கொரோனா ஊரங்கு காரணமாக சினிமா தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு 8 மாதங்களுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இதனை அடுத்து ஜனவரி 13 -ந் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் மாஸ்டர் படம் ஒரே சமயத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கோரிக்கை
ஆனால், திரையரங்கில் ஐம்பது சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது. இதுகுறித்து விஜய் தரப்பிலிருந்து ஏற்கனவே தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கோரிக்கை வைத்தனர். பாதி திரையரங்கில் மட்டுமே ரசிகர்களை அனுமதித்தால் வசூல் பாதிக்கும். தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதே போல் பெரிய திரைநட்சத்திரங்கள் படம் வெளியாகும் போது ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சிகள் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் ஒளிபரப்பாகும் அதற்கும் அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கைக்குத் தமிழக அரசு தரப்பிலிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை.
முதல்-அமைச்சருடன் சந்திப்பு
பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாக இருப்பதால், அதற்கு முன்பாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் திடீர் என சந்தித்தார். தியேட்டர்களில் பாரவையாளர்கள் அனுமதியை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்க கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
படத் தயாரிப்பாளர் லலித் குமார் , அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் ஆகியோர் உடன் இருந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது.