புதுப்பொலிவுடன் கடையம் இன்னாசியார் ஆலயம்
1 min readKadayam Innasiyar Temple with a new look-Opened
6.1.2021
கடையம் இன்னாசியார் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இன்னாசியார் ஆலயம்
தென்காசி மாவட்டம் கடையத்தில் புனித இன்னாசியார் (இஞ்ஞாசியார்) ஆலயம் அமைந்துள்ளது. ஆர்.சி.தொடக்கப்பள்ளியுடன் இந்த ஆலயம் உயர்ந்து காணப்படுகிறது.
1900-ம் ஆண்டு கடையத்தில் இயேசு சபை குருக்கள் ஒரு சிறிய ஓலைக்குடிசையுடன் ஒரு ஆலயத்தை அமைத்தார்கள். ஆந்த ஆலயத்திற்கு புனித இன்னாசியார் ஆலயம் என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னர் இயேசு சபை அருட்தந்தை பாப்பையா ஆலயத்தை தரை ஓடுகள் அமைத்து புதுப்பித்தார். 1959ம் ஆண்டு அருட் தந்தை டியூர் இந்த ஆலயத்திற்காக சிறிய இடத்தை வாங்கினார். அப்போது ஆலய மேற்கூரை ஓடுகளாகவும், முன்பகுதி சாவடி ஓலை வேந்தும் இருந்தது. ஆலயத்தினுள் இறைபீடத்தில் இயேசு கிறிஸ்த்து சிலுவையிலும், கீழ்புறம் இன்னாசியார் கையில் வேத புத்தகத்துடனும், மேற்குபுறம் மேரி மாதாவும் இருந்தனர்.
1976-ம் ஆண்டு பழைய ஆலயம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் விரியாக பெரியதோர் ஆலயம் கட்டப்பட்டது. கட்டிடத்தின் வெளிப்புறம் முழுவதும் கன சதுர வடிவ கற்களால் உருவாக்கப்பட்டது. மேற்கூரை சிமெண்டு ஓடு (ஆஸ்பெஸ்டாஸ்) போடப்பட்டது. முன்பகுதி மணிக்கூண்டும், அதற்கு மேலே உச்சியும் இரு கைகளையும் விரித்து அருளும் நிலையில் இயேசுபிரான் சிலையும் அமைக்கப்பட்டது.
2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி கருத்தப்பிள்ளையூர் பங்கில் இருந்து கடையம் தனி பங்காக பிரிக்கப்பட்டது. இந்த பங்கில் தற்போது மாதாபுரம், பிள்ளைகுளம், சேர்வைகாரன்பட்டி, பொட்டல்புதூர், பாட்டத் தெரு, சங்கரன்குடியிருப்பு ஆகிய 6 கிளை சபைகள் உள்ளன.
புதுப்பிப்பு
தற்போது இன்னாசியார் ஆலயம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இறைமேடை அழகுற மரத்தினால் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தரை முழுவதும் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. உள்கூரை வெண்மை நிறத்திலும் பால்வண்ண விளக்குகளாலும் அழுகுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆலயத்திற்கு உள்ளேயே பாடல்கள் பாட தனி மேடை அமைக்கப்பட்டு உள்ளது.
புதுப்பிக்கப்பட்ட இந்த ஆலய திறப்பு விழா நேற்று ( 5.1.2021) மாலை நடந்தது. ஆயர் அந்தோணிசாமி ஆண்டகை தலைமை தாங்கி அர்சித்து திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக திருச்சிலுவை சபை தமிழக மறைமாநில தலைவர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பத்திரகாளி அம்மன் கோவில் மண்டகபடி நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.
விழா இறுதியில் பொது விருந்து பரிமாறப்பட்டது.
விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை அருள் தினேஷ் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.