தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு எதிர்ப்பு; தி.மு.க. வெளிநடப்பு
1 min read
Opposition to Governor’s speech in Tamil Nadu Assembly; DMK Outing
2.2.2021
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. வெளிநடப்பு செய்தது.
கவர்னர் உரை
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் கூட்டம் தொடங்கியது.
கவர்னர் பன்வாரிலால் உரையாற்ற தொடங்கியதும் அவரது உரையை புறக்கணித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
கவர்னர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-
இருமொழிக் கொள்கை
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்க மாட்டோம். இருமொழிக் கொள்கை தொடரும்.
கொரோனா தடுப்பு பணியை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கொரோனா தடுப்பில் தமிழக காவல்துறை சிறப்பாக பணியாற்றியுள்ளது.
அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கான முதல் கட்ட பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும்.
தமிழகம் தொடர்ந்து 3 முறை நல்லாளுமைக்கான விருதை பெற்றுள்ளது. இது முதல்&அமைச்சர் பழனிசாமியின் சிறப்பான நிர்வாகத்தைவே காட்டுகிறது.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனை வரவேற்கிறோம்.
காவிரி – குண்டாறு இணைப்பு திட்ட பணிகள் விரைவில் தொடங்கும்.
தமிழ்மொழி வளர்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் ரூ.13 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
ஆழ்கடலில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்திய அளவில் தமிழகத்தில் அதிக முதலீடு திட்டங்களை ஈர்க்க அரசு ஒப்புதல் அளித்துள்ள புதிய தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
வெளிநடப்பு ஏன்?
தமிழக சட்டசபையில் இருந்து தி.மு.க. திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது ஏன் என்பதற்கு எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அவர் வெளிநடப்பு செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:&
அதிமுக அரசு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் அளித்தோம். நடவடிக்கை எடுக்கவில்லை. ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை என்பது குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் கவர்னர் முடிவு எடுக்கவில்லை. இதனால் தான் கவர்னர் உரையை புறக்கணித்தோம். கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.