திரிஷ்யம் 2 (பாபநாசம்) படத்தின் கதை என்ன தெரியுமா?
1 min readDo you know the story of Trishyam 2 (Papanasam)?
20.2.2021
மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசன் நடித்த இந்தப்படம் வெற்றிப் படமாக அமைந்தது.
அந்தப் படத்தில் கமல்ஹாசன் ஒரு கேபிள் டி.வி. ஆபரேட்டராக நடத்திருப்பார். அவரது இரண்டு மகளில் ஒருவரை சக மாணவன் தன் ஆசைக்கு இணங்க வற்புறுத்துகிறான். அவனை மாணவி கொன்றுவிடுகிறாள். இந்த கொலையை கடைசிவரை மறைப்பதுதான் கதை. இதற்காக கமல்ஹாசன் மட்டுமின்றி அவனது குடும்பமே போலீசாரின் சித்ரவதைக்கு உள்ளாகும். மாணவனின் சடலைத்தை புதிதாக கட்டும் போலீஸ்நிலைய அஸ்திவாரத்தில் புதைத்ததை கமல்ஹாசன் யாருக்கும் சொல்லாமல் மறைத்து இருப்பது கதையின் முக்கிய கருவாக பேசப்பட்டது.
மலையாளப்படமான திரிஷ்யம் படத்தின் 2 வது பாகம் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், மீனாவே நடித்துள்ளனர். இயக்குனர் ஜீத்து ஜோசப் 2வது பாகத்தையும் இயக்கியுள்ளார்.
முதல் பாகம் கதை முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ‘திரிஷ்யம் 2’ கதை தொடங்குகிறது. சாதாரண கேபிள் ஆபரேட்டராக இருந்த கதாநாயகன்(மோகன்லால்), இப்போது ஒரு தியேட்டர் உரிமையாளராக இருக்கிறார். தான் எழுதி வைத்திருக்கும் ஒரு கதையைப் படமாகத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஆறு ஆண்டுகளில் மோகன்லாலிடம் ஏற்பட்ட மாற்றங்களை மீனா விரும்பாமல் இருக்கிறார். இவர்களின் மூத்த மகள் அன்ஸிபா, முன்பு நடந்த கொலை சம்பவத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார்.
ஆறு ஆண்டுகளாக எந்தப் பிரச்சினைகளும் இல்லாமல் நிம்மதியாகப் போய்க் கொண்டிருந்தாலும், மொத்தக் குடும்பமும் சிறிய பயத்துடனே இருந்து வருகிறது. மோகன்லாலின் வளர்ச்சியால் பொறாமையில் இருக்கும் சிலர் கொலையை அவர்தான் செய்ததாகவே நம்புகின்றனர்.
இதற்கிடையே மோகன்லாலை மீண்டும் சிக்கவைக்க காத்திருக்கும் போலீசுக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. இதனால் மீண்டும் சிக்கலில் மாட்டுகிறார் மோகன்லால். இறுதியில் போலீசிடம் மோகன்லால் சிக்கினாரா? போலீஸ் விசாரணையை மோகன்லால் எப்படி எதிர்கொண்டனர்? இறுதியில் வென்றது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
மோகன்லாலின் மனைவி ராணியாக வரும் மீனா, கணவனிடம் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு விரும்பாமல் இருப்பது, பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் குற்ற உணர்வில் அழுது புலம்புவது, என நடிப்பில் பளிச்சிடுகிறார். மகள்களாக அன்ஸிபா, எஸ்தர் அனில், அதிகாரியாக வரும் முரளி கோபி என அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். முதல் பாகத்தில் நடித்த ஆஷா சரத் இதிலும் வந்து நடித்து மனதில் நிற்கிறார்.
முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலிருந்து ஒரே நூல் பிடித்து ஒரு முழுக் கதையை வடிவமைத்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப். படம் தொடங்கிய பத்தாவது நிமிடம் நம்மைத் தொற்றிக் கொள்ளும் பரபரப்பு படம் முடியும் வரை நம்மை விட்டு நீங்காமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர். படத்தில் மோகன்லால் கொலை மறைக்க போராடுவது போல், இயக்குனர் ஜீத்து ஜோசப் இந்த கதைக்காக மிகவும் போராடி இருக்கிறார். இந்த போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம். திரைக்கதையில் மாயாஜாலம் புகுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.
முதல் பாகத்தைப் போல் இரண்டாம் பாகமும் விறுவிறுப்பாக உள்ளது.