May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லூர் தொகுதியில் மையவாடிக்கு அரசு நிலம் வழங்க எம்.எல்.ஏ .கிருஷ்ணமுரளி கோரிக்கை

1 min read

MLA Krishnamurali’s request to provide government land to Maiwadi in Kadayanallur constituency

28.3.2023
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையநல்லூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் மையவாடிக்கு அரசு நிலம் வழங்குவதோடு அச்சன்புதூர் மணக்காடு தவ்ஹித் பள்ளிவாசல் மையவாடிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா சட்டமன்றத்தில் பேசினார்.

இதுபற்றி அவர் சட்டமன்றத்தில் பேசியதாவது:-

பள்ளிவாசல்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி சிறுபாண்மை மக்கள் நிறைந்த தொகுதி ஆகும். கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சன்புதூர் மணக்காடு தவ்ஹீத் பள்ளிவாசலில் உள்ள மையவாடி நீர்நிலைகளுக்கு அருகில் இருப்பதால் மழைக்காலங்களில் அந்த மையவாடி இடத்திற்குள் பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு மழை நீர் சூழ்ந்து பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. எனவே அந்த மையவாடிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய தமிழக சிறுபான்மைத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது:-

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சன்புதூர் பேரூராட்சியில் அமைந்துள்ள மணக்காடு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு சொந்தமான மையவாடி இடம் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்படாமல் உள்ளது . எனவே உடனடியாக அதனை வக்பு வாரியத்தில் பதிவு செய்தால் உடனடியாக துறை ரீதியாக சுற்றுச்சுவர் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படும் இந்த ஆண்டு 10 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ணமுரளி கடையநல்லூர் பகுதியில் வக்பு வாரியத்தில் பதிவு செய்த பள்ளிவாசல்களில் அடக்கம் செய்யக்கூடிய இடங்களை பொறுத்தவரையில் முழுமையாக இடம் இல்லாததால் கூடுதலாக இடங்கள் வழங்குவதற்கு வருவாய்த்துறையில் இருந்தோ அல்லது வேறு ஏதேனும் துறைகளில் இருந்து நிலங்கள் எடுத்து அந்த மையவாடிகளுக்கு இடங்கள் வழங்குவதற்கும் அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் “சிறுபான்மையினர் நலத்துறைக்கு மையவாடிகள் பகுதியை விரிவு படுத்துவதற்காக தனியார் இடத்தில் இடத்தை வாங்கினாலும் , அரசு சார்ந்த இடம் அருகில் இருந்தாலும் அதனைப் பெற்றுத் தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளி அந்தப் பகுதியில் இருக்கின்ற அரசு சார்ந்த இடங்களை தென்காசி கலெக்டர் இடத்திலே சுட்டிக்காட்டி அவரிடத்திலே கோரிக்கை வைத்தால் துறை சார்பாக அதற்கு பரிந்துரை செய்து மையவாடிக்கு தேவையான இடத்தை உடனடியாக பெற்று தருவோம். மேலும் மையவாடிக்காக தனியார் இடத்தை விலைக்கு வாங்கினாலும் அதற்கு துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் கூறினார்.

இதற்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ‌கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தமிழக சட்டமன்றத்தில் தொகுதி மக்களின் கோரிக்கைகள் பற்றி பேச அனுமதி அளித்த சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் தனது கேள்விகளுக்கு உரிய பதிலளித்த சிறுபானண்மைத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார்.

=முத்துசாமி, தென்சாசி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.