தென்காசியில் லாரி மூலம் கஞ்சா கடத்தல் – 5 பேர் கைது
1 min read
Smuggling of cannabis by truck in Tenkasi – 5 arrested
19.2.2026
தென்காசி மாவட்டத்தில் கஞ்சா கடத்தி வந்த ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவற்றின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். மாதவன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பண்பொழியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் கஞ்சா கடத்துவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில், தென்காசி காவல் ஆய்வாளர் ராபர்ட் ஜெயின் மற்றும் சார்பு ஆய்வாளர் சத்யவேந்தன் ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு தென்காசி குத்துக்கல்வலசையில் வைத்து மேற்படி கஞ்சா கடத்தி வந்த நெட்டூர் பகுதியை சேர்ந்த இசக்கிக்குமார் (வயது 31), பேச்சிமுத்து (வயது 32), அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த நயினார் விக்னேஷ் (வயது 32), ராஜாராம்(எ)கோபி (வயது 26) மற்றும் அய்யனார்குளம் பகுதியை சேர்ந்த மனோரஞ்சித் (வயது 21) ஆகிய ஐந்து நபர்களை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்,
மேலும் அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, பைக், கார் மற்றும் லாரி ஆகிய வாகனங்களும், மேற்படி நபர்கள் பயன்படுத்திய செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை செய்து பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.