ரேஷன் கடைகள் மூலம் மீண்டும் மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசு உத்தரவு
1 min read
Central government orders to resume supply of kerosene through ration shops
30.3.2026
ஈரான் போர் காரணமாக உலகளாவிய எண்ணெய் விலைகளில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு கிடைக்கும் பெட்ரோல்-டீசல் எரி பொருட்கள் மற்றும் எரிவாயு வினியோகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரான் விதித்துள்ள கட்டுப்பாடுகளால் சில நாடுகளின் கப்பல்கள் மட்டுமே எரிபொருட்களுடன் கடந்து வருகின்றன. இந்தியாவுக்கு இதுவரை சில கப்பல்களில் எரிபொருட்கள் வந்து சேர்ந்துள்ளன.
இதற்கிடையே ரஷியாவிடம் எரிபொருள் வர்த்தகம் செய்யக்கூடாது என்று அழுத்தம் கொடுத்து வந்த அமெரிக்காகூட, போர் சூழல் காரணமாக ரஷியாவிடம் எரிபொருள் வாங்க அனுமதி அளித்தது. எனவே இந்தியா எரிபொருளுக்கான மாற்று வழியாக ரஷியா மூலம் கிடைக்கும் எரிபொருளை பயன்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் எரிசக்தித் தட்டுப்பாட்டை தவிர்க்க, அவசரக்கால நடவடிக்கையாக அடுத்த 60 நாட்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மீண்டும் மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மண்ணெண்ணெய் பயன்பாடே இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த விநியோகத்தை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில அரசால் அடையாளம் காணப்படும் 2 பொதுத்துறை பெட்ரோல் பங்க்குகளில் நேரடியாகப் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கான விதிமுறைகளில் தற்காலிக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல் பங்க்குகளில் அதிகபட்சமாக 2,500 லிட்டர் மண்ணெண்ணெய் சேமித்து வைக்கலாம் என்றும் மாநில அரசுகள் தேர்வு செய்யும், மாவட்டத்திற்கு 2 பெட்ரோல் பங்க்குகளில் 5,000 லிட்டர் மண்ணெண்ணெய் சேமிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.