June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

ஊட்டியில் ரோஜா கண்காட்சி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

1 min read

Rose exhibition in Ooty – inaugurated by the Collector

14.5.2026
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டியில் ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்த நிலையில், ஊட்டி விஜயநகரம் பகுதியில் உள்ள ரோஜா பூங்காவில் 21-வது ரோஜா கண்காட்சி இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இதனை நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி இன்று தொடங்கி 18-ந்தேதி வரை(5 நாட்கள்) நடக்கிறது.

இந்த கண்காட்சியில் 4 ஆயிரம் ரகங்களை சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா செடிகளில் பல வண்ணங்களில் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இதில் சிறப்பம்சமாக 60 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு பிரம்மாண்ட ஜோடி அன்னப்பறவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர பூங்காவில் பாரம்பரிய ரோஜாக்களுக்கு என தனியாக இடம் உள்ளது. இங்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாரம்பரியமிக்க ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளதால், தற்போது மலர்கள் பூத்து உள்ளது.

இந்த ஆண்டு ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சிக்காக பறவைகளை பாதுகாப்போம் என்ற கருத்தை மையப்படுத்தி, பல வண்ணங்களை கொண்ட ரோஜா மலர்களை கொண்டு அன்னப்பறவை, ஹார்ன்பில் எனப்படும் இருவாச்சி, தூக்கனாங்குருவி, கழுகு, சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டு, குழந்தைகள் முதல் அனைவரையும் கவரும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

5 நாட்கள் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் பட்சத்தில் மேலும் சில நாட்கள் கண்காட்சி நீட்டிக்கப்படலாம் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ரோஜா கண்காட்சிக்கு அடுத்தபடியாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *