தென்மேற்கு பருவமழை; 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
1 min read
Southwest monsoon; Heavy rain warning for 5 districts
15.5.2026
தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளது. வழகத்தை விட 5 நாட்களுக்கு முன்பாகவே துவங்குகிறது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நிலவுகிறது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (மே 15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (மே 16) விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் (மே 17) திண்டுக்கல், தேனி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். அதேபோல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (மே 15) முதல் மே 18ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.