அதிமுகவில் இருந்து வைகைச் செல்வன் ராஜினாமா
1 min read
Vaigai Chelvan resigns from AIADMK.
3.7.2026
அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பு முதன்மை செயலாளராக இருந்த வைகைச் செல்வன் அறிவித்துள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்புக்கு பிறகு முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி, மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்து விட்டனர்.
இந்த சூழலில், அதிமுகவின் மற்றுமொரு முன்னாள் அமைச்சரும், செய்தித் தொடர்பு முதன்மை செயலாளருமான வைகைச் செல்வனும் கட்சியில் இருந்து விலகுவதாக பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதத்தில்; திமுகவோடு இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதன் மூலம், திமுக எதிர்ப்பு நிலையில் இருந்து, அதிமுக சமசர போக்கில் போனதால் தனது அடையாளத்தை இழந்து விட்டது. சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பதன் காரணமாகவும், தனது வெற்றிப்பாதையில் இருந்து அதிமுக விலகிச் சென்று விட்டது.
தேர்தல் களத்தில் நான் தனித்து விடப்பட்ட நிலையிலும் கூட, கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்தேன். ஆனால், மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு என்பதை நான் உணர்ந்து கொண்டேன். எனவே, இந்த கட்சியில் இருந்து விலகுகிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது அக்கட்சியின் தலைமை மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜயை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜசேகரன் போட்டியிட்டார். தேர்தலில், விஜய் வெற்றி பெற்றார். ராஜசேகரன் மூன்றாம் இடம் பிடித்தார்.
இந்நிலையில், ராஜசேகரன், அ.தி.மு.க.,வில், தான் வகித்து வந்த திருச்சி மாநகர பொருளாளர் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுவதாக, பொதுச்செயலர் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இவர் விரைவில், த.வெ.க.,வில் இணைவார் என்று தெரிகிறது.