தென்காசியில் இந்திய ரிசர்வ் வங்கியின் இ- பாட் விழிப்புணர்வு முகாம்
1 min read
Reserve Bank of India’s e-BAAT awareness camp in Tenkasi
27.7.2026
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அறிவுறுத்தலின்படி, தென்காசி மாவட்ட முன்னணி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) சார்பில், பொதுமக்களுக்கான மின்னணு வங்கி விழிப்புணர்வு மற்றும் பயிற்சி (e-BAAT) நிகழ்ச்சி குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது.
பொதுமக்களிடம் டிஜிட்டல் வங்கி சேவைகள், நிதி அறிவாற்றல், பாதுகாப்பான இணையவழி வங்கி பரிவர்த்தனைகள், இணைய மோசடிகளைத் தடுக்கும் வழிமுறைகள், கடன் வசதிகள் மற்றும் நிதி உள்ளடக்கத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை தென்காசி மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்திய ரிசர்வ் வங்கியின் மேலாளர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர், டிஜிட்டல் வங்கி சேவைகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது, இணையவழி நிதி மோசடிகளில் இருந்து எச்சரிக்கையுடன் இருப்பது மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விரிவாக விளக்கமளித்தனர்.
இந்த நிகழ்வில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் ஆர். பரமேஸ்வரன், முதன்மை மேலாளர் அனு, செங்கோட்டை நகராட்சி ஆணையர் ஜெகதீஸ்வரி, தென்காசி மாவட்ட முன்னணி வங்கி மேலாளர் முத்துசாமி, மாவட்ட முன்னணி வங்கி அலுவலர் தனசெல்வம், நிதி உள்ளடக்கத் திட்ட மேலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் மீட்கப்பட்ட ₹18 லட்சம் மதிப்பிலான DEAF (Depositor Education and Awareness Fund) கணக்குத் தொகைக்கான காசோலையை, முதன்மை மண்டல மேலாளர் ஆர். பரமேஸ்வரன், செங்கோட்டை நகராட்சி ஆணையர் ஜெகதீஸ்வரியிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் டிஜிட்டல் வங்கி சேவைகள், இணைய பாதுகாப்பு, இணைய மோசடிகளைத் தவிர்ப்பது, வங்கிகளின் கடன் திட்டங்கள் மற்றும் அரசின் நிதி உள்ளடக்கத் திட்டங்கள் குறித்த பயனுள்ள தகவல்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர் இந்த நிகழ்வில் மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வங்கி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட முன்னணி வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் செய்திருந்தனர்..