அமுதாவின் ஆசைகள் -12 / நாடகம் / கடையம் பாலன்
1 min readAmuthavin Asaikal-12 / Drama by Kadayam Balan
காட்சி 12
இடம்- சாலையோரம்
பங்குபெறுவோர் -முனியன், கருப்பன், கைசூப்பி கைலாசம், விமலா, போஸ்ட் மேன்.
————-
முனியன்: என்ன கருப்பா எப்படி இருக்க?
கருப்பன்: அண்ணே பேச்சை மாத்தாதீங்க. அன்னிக்கு என்ன சொன்னீங்க.
முனியன்: நான் என்னடா சொன்னேன்-?
கருப்பன்: நம்ம கைசூப்பியை அவனையே கைசூப்பின்னு சொல்ல வைக்கிறேன்னு சொன்னீங்களே. அதான் உங்களால முடியலியே. ம்… ம்… கொடுங்க பந்தய ரூபாய் ஐநூறை. ம்… எடுங்க.
முனியன்: ஏலே அவசரப்படாதே. கொஞ்சம் பொறு… அதோ கைசூப்பி வர்றான்.
கருப்பன்: அண்ணேன் கைசூப்பின்னு நீங்க சொல்லி என்னை அடி வாங்க வைச்சிடாதீங்க.
முனியன்: நீ இந்தப்பக்கம் ஒளிஞ்சி நில்லு. நடக்கிறதா கவனமா பாரு.
(கருப்பன் கைசூப்பி கைலாசம் வரும் எதிர் திசையில் செல்கிறான். சற்று நேரத்தில் கைசூப்பி கைலாசம் வருகிறான்)
கைசூப்பி கைலாசம்: அண்ணே எங்கேயோ போற மாதிரி தெரியுது.
முனியன்: ஆமா கொஞ்சம் அவசரமாக வெளியூருக்கு போயிட்டு வர்றவேண்டியது இருக்கு. சரி கைலாசம் உன் கைய அட்டை கடிச்சுதே. எல்லாம் சரியாயிடுச்சா.
கைசூப்பி கைலாசம்: அண்ணே அந்த அட்டை நான் விமலா வீட்டு முருங்க மரத்திலே ஏறினப்ப கடிக்கல.
முனியன்: பின்னே எங்கே கடிச்சுது?
கைசூப்பி கைலாசம்: (அங்கும் இங்கும் பார்த்துவிட்டு) நான் கைசூப்புறத நிறுத்துவதற்கு.. நான் தூங்கும்போது எங்க அம்மா அட்டையை பிடிச்சி என் விரல்ல விட்டுருக்கா… அது என் கைமேல ஏறி கடிச்சிட்டுது.
முனியன்: சரி… உன்னை போஸ்ட் மேன் தேடின மாதிரி தெரிஞ்சுது.
கைசூப்பி கைலாசம்: எதுக்கு அண்ணே?
முனியன்: உனக்கு நூறு ரூபாய் மணியார்டர் வந்திருக்கு. கண்டா போய் வாங்கிக்கோ.
(முனியன் செல்கிறான்.)
கைசூப்பி கைலாசம்: நூறு ரூபாயா-? யாரு அனுப்பி இருப்பாங்க. சரி எந்த புண்ணியவாளனோ. அந்த பணம் கிடைச்சதும் விமலாவுக்கு ஏதாவது வாங்கி கொடுக்கணும்.
(போஸ்ட் மேன் அந்த வழியாக வருகிறான்)
என்ன தம்பி… நீதான் போஸ்ட் மேனா?
போஸ்ட்மேன்: இல்ல போலீஸ்மேன். என்னப்பா ஆளப்பார்த்தா தெரியலியா?
கைசூப்பி கைலாசம்: என்னப்பா நக்கலா? ஊருக்கு புதுசா. ம்… போஸ்ட் மேனா இந்த ஊருக்கு வந்திருக்க. நாலு பெரிய மனுசனை தெரிஞ்சி வைச்சிக்கோ. அதான் உன் தொழிலுக்கு நல்லது.
போஸ்ட்மேன்: எப்பா எங்களுக்கு நீ ஒண்ணும் தொழில கத்து தர வேண்டாம்.
கைசூப்பி கைலாசம்: எப்பா எங்கள மாதிரி ஆளுங்க இருக்கிறதாலத்தான் உங்களுக்கெல்லாம் வேலை இருக்கு. இல்லாட்டி போஸ்ட் ஆபீசையே மூடிட்டு போயிட வேண்டியதுதான். சரி… சரி… எனக்கு மணியார்டர் வந்திருக்காமே. தா… தா.. எதுல கையெழுத்து போடணும்.
போஸ்ட் மேன்: எப்பா நீ யாரு-? திடீன்னு வந்து மணியார்டர் வந்திருக்கான்னு கேட்கறே
கைசூப்பி கைலாசம்: நான் யாருன்னு தெரியலியாம். அதுக்குத்தான் சொன்னேன் ஊருல நாலு பேரை தெரிஞ்சி வைச்சிருக்கணும்ன்னேன். நம்மள தெரியாம.. நம்ம ஊர்ல ஒரு போஸ்ட் மேன். ம்… காலம் கெட்டுப்போச்சு. ஒரு பச்சப்பிள்ளைக்கிட்ட கேட்டாலும் எம் பேரை சொல்லும்.
போஸ்ட்மேன்: சரி உம்பேரு என்ன சொல்லு? மணியார்டர் வந்திருக்கான்னு பார்த்து சொல்றேன்.
கைசூப்பி கைலாசம்: எம் பேரு கைலாசம்.
போஸ்ட்மேன்: போ… போ… உனக்கு மணியார்டரும் வரல. ஒரு மண்ணாங்கட்டியும் வரல.
கைசூப்பி கைலாசம்: என்னப்பா இப்படி சொல்றான். ஏ… நல்லா பார்த்துச் சொல்லுப்பா…
போஸ்ட்மேன்: எப்பா கைலாசம்ங்கிற பேருக்கு எந்த மணியார்டரும் வரல.
கைசூப்பி கைலாசம்: சரி எந்தெந்த பேருக்கெல்லாம் மணியார்ட்டர் வந்திருக்கு கொஞ்சம் பார்த்துச் சொல்லு.
போஸ்ட்மேன்: ஏன் அந்தப்பேரைச் சொல்லி பணத்தை வாங்கிக்கிடலாம்ன்னு நினைக்கிறீயா?
கைசூப்பி கைலாசம்: ஏய் இன்னொருத்தன் பணத்தை வாங்கிறதுக்கு நாங்க ஒண்ணும் தரம்கெட்டு போகல.
போஸ்ட்மேன்: கைலாசம்ங்கிற பேருக்கு பணம் ஏதும் வரல. ஆமா… ஒரு மொண்ணப்பயலுக்கு எவனோ ஒருத்தன் அட்ரசை சரியா எழுதாம நூறு ரூயாய அனுப்பி இருக்கிறான். அவனைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்.
கைசூப்பி கைலாசம்: அது யாருப்பா… மொண்ணப்பய…
போஸ்ட்மேன்: கைசூப்பி….
கைசூப்பி கைலாசம்: ஏ… எவ்வளவு திமிறு இருந்தா என்னை கைசூப்பின்னு சொல்லுவ. (போஸ்ட் மேன் சட்டையை பிடிக்கிறான்)
போஸ்ட்மேன்: ஏய் என் சட்டைய பிடிச்சிட்டியா. நான் ஒரு சென்ட்ரல் கவர்ன்மெண்ட் எம்ளாய். எம் பின்னாடி எத்தனை பேரு இருக்காங்க தெரியுமா?
கைசூப்பி கைலாசம்: பின்ன என்னடா என்னை கைசூப்பின்னு சொன்னே?
போஸ்ட் மேன்: உன்னை யாருடா கைசூப்பின்னு சொன்னா. கைசூப்பிங்கிற பேருக்கு மணியார்டர் வந்திருக்குன்னு சொன்னேன்.
கைசூப்பி கைலாசம்: என்னச் சொன்ன? என்னச் சொன்ன? கைசூப்பி பேருக்கு பணம் வந்திருக்கா… எடு… எடு… நான்தான் கைசூப்பி.
போஸ்ட்மேன்: ஏய்… என்னை என்ன கேணப்பயன்னு நினைச்சியா? நீ கைசூப்பி… உனக்கு நான் பணம் தரணும்.
கைசூப்பி கைலாசம்: இல்ல தம்பி..
போஸ்ட்மேன்: என்ன தம்பியா?
கைசூப்பி கைலாசம்: இல்ல.. அண்ணே…
போஸ்ட்மேன்: அண்ணனா?
கைசூப்பி கைலாசம்: இல்ல சார்..
போஸ்ட்மேன்: என்ன நொள்ள சார்… சொல்லு.
கைசூப்பி கைலாசம்: சார், நான்தான் கைலாசம், நான்தான் கைசூப்பி. இது என் பட்டபேரு.
போஸ்ட்மேன்: செத்துப்போனப் பிறகும் அவங்க பென்சனை வாங்கி சில பேரு எங்க டிப்பார்ட்மெண்டயே நாத்தமடிக்க வச்சிட்டாங்க. நீ என்ன புதுசா மோசடிப்பண்ண வந்திருக்கியா?
கைசூப்பி கைலாசம்: இல்லசார் நான்தான் கைசூப்பி, நான்தான் கைசூப்பி.. இந்த ஊர்ல யாருக்கிட்ட வேணும்ன்னாலும் கேட்டுப்பாருங்க. நான்தான் கைசூப்பி… அதோ கருப்பன் வாறான். அவங்கிட்ட வேணும்ன்னாலும் கேளுங்க. டேய் கருப்பா… இங்க வாயேன். (கருப்பன் வருகிறான்) கருப்பா… நான்தானே கைசூப்பி…
கருப்பன்: நீ கைசூப்பியா. அய்யய்யோ. நீ கைலாசம்ல்லா.
போஸ்ட்மேன்: என்னப்பா. உங்க ஊருக்காரனே நீ கைசூப்பி இல்லைங்கிறான். எங்கிட்டேயே ஏமாத்த பார்க்கிறீயா?(அடிக்கிறான்)
கைசூப்பி கைலாசம்: அடிக்காதீங்க… நான்தான் கைசூப்பின்னு நிரூபிக்கிறேன்.
அதோ.. விமலா வர்றா…
(விமலா வருகிறாள்)
கைசூப்பி கைலாசம்: விமலா நல்லா இருக்கியாம்மா.
விமலா: நல்லா இருக்கேன் கைலாசம்.
கைசூப்பி கைலாசம்: அய்யோ கைலாசம்ன்னு சொல்றீயே.
விமலா: ஆமா உங்க பேரு கைலாசம்தானே. பின்னே எப்படி சொல்றது?
கைசூப்பி கைலாசம்: இல்லை என்னை கைசூப்பின்னுதானே கூப்பிடுவாங்க.
விமலா: அய்யோ நான் அப்படி எல்லாம் கூப்பிட மாட்டேன். நாளைக்கு வீட்டுக்கு வாங்க ஒரு முக்கியமான வேலை இருக்கு என்ன?
(விமலா போகிறாள்)
போஸ்ட்மேன்: டேன் என்னடா அப்பாவி பொண்ண மிரட்டுறீயா?
கைசூப்பி கைலாசம்: நம்ம விமலாவும் கைவிரிச்சிட்டாளே. உனக்குத்தானே இந்த பணத்தை வச்சி ஏதாவது வாங்கித்தர நினைச்சேன். என் ஆசையில மண்ணை அள்ளிப்போட்டுட்டியே விமலா.
போஸ்ட்மேன்: ஊரான் பணத்தை வாங்கி பொம்பளைக்கு பரிசு வாங்கிக் கொடுக்கப்போறீயா? நீ எல்லாம் பிச்சை எடுத்து பிழைக்கலாம்.
கைசூப்பி கைலாசம்: அய்யய்யோ நான்தான் கைசூப்பின்னு யாருமே சொல்ல மாட்டேங்கிறாங்களே. போஸ்ட்மேன் சார்.. எங்க வீட்டுக்கு வாங்க. எங்க அம்மாக்கிட்ட கேட்டுப்பாருங்க அவங்க சொல்லுவாங்க.
போஸ்ட்மேன்: டேய் மடயா. முதல்ல அங்கேதான்டா போய் கேட்டேன். அந்த கிழவி என்னை விளக்குமாத்தை கொண்டு அடிச்சி விரட்டிட்டா.
கைசூப்பி கைலாசம்: அய்யோ அம்மா நீயும் கைவிட்டுட்டியா? நான்தான் கைசூப்பின்னு எப்படி நிருபிப்பேன். ஆ… சார் என் கைவிரல பாருங்க. கைசூப்பி கைசூப்பி வெளிறிப் போய் இருக்கு.
போஸ்ட்மேன்: கை வெளிறினது இருக்கட்டும். கைசூப்பினா பல்லு எல்லாம் உயர்ந்திருக்கும்னு சொல்வாங்களே. உனக்குத்தான் பல்லு நல்லாத்தானே இருக்கு. சரி சரி நீ கைசூப்பின்னா ஆதாரத்தை கொண்டு வந்து காட்டி பணத்தை வாங்கிட்டுபோ.
(போஸ்ட்மேன் போகிறான்)
கைசூப்பி கைலாசம்: ஏலே கருப்பா. நீயும் என்னை கால வாறிவிட்டுட்டியே. நான்தான் கைசூப்பின்னு உனக்கு தெரியாதா?
கருப்பன்: தெரியும்.
கைசூப்பி கைலாசம்: தெரியும்ன்னுட்டா. ஹலோ போஸ்ட்மேன்… போஸ்ட் மேன் இவன் நான்தான் கைசூப்பின்னு சொல்லிட்டான். பணத்தை தாங்க… ஹலோ… அய்யபோ போஸ்ட் மேன் போயிட்டானே.. என்னப்பா காலம் கடந்து ஞானோதயம் வந்திருக்கு. அப்பவே சொல்லி இருக்கக்கூடாதா? (கருப்பனை அடிக்கிறான்)
கருப்பன்: அய்யோ கைசூப்பின்னு சொன்னாம் அடிக்கிறான். சொல்லாவிட்டாலும் அடிக்கிறானே.
கைசூப்பி கைலாசம்: எனக்கு நூறு ரூபாய் கிடைக்காம போச்சே. நான் என்ன செய்வேன்.
முனியன்: (வருகிறான்) என்னப்பா கைலாசம் புலம்பிக்கிட்டே இருக்க.
கைசூப்பி கைலாசம்: அண்ணே ஊருக்கு போறேன்னு சொன்ன நீங்க நல்ல வேளை திரும்பி வந்திட்டீங்க. அண்ணே எனக்கு மணியார்டர் வந்திருக்கு சொன்னீங்களே. அது கைசூப்பிங்கிற பேருக்கு வந்திருக்கு. அந்த பாவிப்பய நான் கைசூப்பி இல்லைன்னு சொல்லி பணத்தை தராமபோயிட்டான். இந்த கருப்பனும் எனக்கு எதிரா சதி செய்திட்டாண்ணேன். ஏலே கருப்பா. வா… ஏன் என்னை கைசூப்பின்னு சொல்லல்ல. (அடிக்கிறான்)
கருப்பன்: அடப்பாவி அன்னிக்கு கைசூப்பின்னு சொன்னதுக்கு அடிச்சான். இன்னிக்கு கைசூப்பின்னு ஏன் சொல்லலன்னு அடிக்கிறான்.
முனியன்: கைலாசம் நீ போ. நான் நாளைக்கு உன்னை போஸ்ட் ஆபீசுக்கு கூட்டிட்டுபோய் பணத்தை வாங்கித்தாரேன்.
கைசூப்பி கைலாசம்: அண்ணே பணத்தை வாங்கிற வரைக்கும் என்னை கைசூப்பின்னே கூப்பிடுங்க.(போகிறான்.)
முனியன்: ஏலே கருப்பா… பார்த்தியா பந்தயத்தில ஜெயிச்சது யாரு. எடு ஐநூறு ரூபாய.
கருப்பா: அண்ணே நீங்க நீங்கத்தான். இந்தாங்க பணம்.
முனியன்: அந்த கைசூப்பி பயலுக்கு நான்தான் நூறு ரூபா அனுப்பினேன். மீதி நானூறு லாபம்.
கருப்பன்: அண்ணே இந்த கைலாசம் எதுக்கெடுத்தாலும் என்னை அடிக்கிறான். இதுக்கு ஒரு முடிவே இல்லியா?
முனியன்: உம் பேரு கருப்பன்தானே. உம் பேருள்ள கருப்பசாமி கோவில்ல திருவிழா நடக்குது. அங்கே போய் சாமிக்கிட்ட சொல்லு. எல்லா பிரச்சினையும் தீர்ந்திடும்.
கருப்பன்: சரி அண்ணே.
—
படம்
இந்த நாடகம் மேடையில் அரங்கேறும்போது கைசூப்பி கைலாசமாக நடித்த திரு. ராமகிருஷ்ணன்.