கண்ணாயிரம் தவறவிட்ட மினரல்வாட்டர்கேன்/ நகைச்சுவை கதை
1 min readKannayiram lost water can/ Story by Thabasukumar
21/3/2022
கண்ணாயிரம் வடநாட்டில் காணாமல்போன கழுதையை கண்டுபிடிக்க போலீசார் உதவிகேட்டதும் வீட்டிலிருந்து புறப்பட்டார். வடநாட்டில் தண்ணீர் சரியாக இருக்காது என்பதற்காக மினரல்வாட்டர் கேனை அவரது மனைவி பூங்கொடி கையில் கொடுத்துவிட்டார். அந்தகேனுடன் போலீஸ்வேனில் ஏறச்சென்ற கண்ணாயிரத்தைபார்த்த அவரது நண்பர் தப்பாக நினைத்தார்.
மினலர்வாட்டர்கேனை சாராய கேனாகநினைத்து கண்ணாயிரம் இந்த சாராயம் விற்கும் தொழிலைசெய்யலாமா என்று கண்டித்தார். இதை கேட்ட கண்ணாயிரம் கோபத்துடன் மினரல்வாட்டர் கேனுடன் வீட்டுக்குள் வந்தார். பூங்கொடியைபார்த்து மினரல்வாட்டர்கேனை கொண்டு போகமாட்டேன் .அதைபார்க்கிறவங்க சாராய கேனுன்னு நினைக்கிறாங்க என்றார்.
பூங்கொடி அவரை அமைதிபடுத்தினார்.ஊருல்ல உள்ளவங்க அப்படிதான் சொல்வாங்க..நீங்க ஏன் பயப்படுறீங்க..தப்பு செய்கிறவங்கதான் பயப்படணும்…மினரல்வாட்டர் கேனில் இது சாராய கேன் இல்ல..மினரல்வாட்டர்கேன் என்று எழுதிஒட்டிடுவோம்..சரிதானா..என்று கேட்டார்.
கண்ணாயிரமும் சரி என்று தலையை ஆட்டினார்.பின்னர் பூங்கொடி இரண்டு பேப்பரில் எழுதி மினரல்வாட்டர் கேனில் இருபக்கமும் ஒட்டினார்.கண்ணாயிரம் அதை கூர்ந்துபார்த்தார்.அவரிடம்..ஏங்க முன்வைத்த காலை பின்வைக்கக்கூடாது…துணிந்து செல்லுங்கள்..வெற்றி நமதே என்றார்.
கண்ணாயிரம் உற்சாகமானார். மினரல்வாட்டர்கேனை கையில் எடுத்துக்கொண்டு வேகமாக புறப்பட்டார்.வீட்டைவிட்டு வெளியேவந்து போலீஸ்வேன் அருகேவந்தார்.
கண்ணாயிரம் வீட்டுக்கு போலீஸ்வந்திருக்கு என்றவுடன் பொதுமக்கள் அங்கு கூடினார்கள்.கண்ணாயிரத்தின் மினரல்வாட்டர்கேனில் எழுதி இருப்பதை பார்த்து என்ன…கண்ணாயிரம் இப்படி எழுதி வச்சிருக்கார்…அவர்மினரல் வாட்டர்கேனைதானே கொண்டுபோறாரு…பின்ன எதுக்கு இது சாராய கேனில்ல அப்படின்னு எழுதி இருக்கார் என்றனர்.
அதில் ஒருவர்…என்ன இது எங்க அப்பன் குதிருக்குள் இல்லைன்னு சொல்லுறமாதிரி இருக்கு..ஒருவேளை இது சாராய கேனாகத்தான் இருக்குமோ…என்று சந்தேகப்புயலை கிளப்பினார்.
அதை கேட்டதும் கண்ணாயிரம் கோபமாகி இதுமினரல்வாட்டர்கேன்…இதுமினரல்வாட்டர்கேன்…நான்துப்பறியும் கண்ணாயிரம்…காணாமல்போன கழுதையை மீட்க வடநாடுபோறன்…வடநாடு போறேன்…என்று கூறிவிட்டு போலீஸ்வேனில் ஏறினார்.
அங்கே கூடியிருந்தவர்கள்…நாம வேறமாதிரியல்லா நினைச்சோம்…சப்புன்னு ஆயிபோச்சே என்றபடி அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.
பூங்கொடி கையை அசைத்தார்.கண்ணாயிரம் வேனில் இருந்தபடி கையை அசைத்தார்.மினரல்வாட்டர் கேனை தன் அருகில் வைத்துக்கொண்டார்.வேன் புறப்பட்டு சென்றது.
கண்ணாயிரம்யோசனையில் இருந்தார்.கழுதைக்கு இந்தியில் உள்ள கதா என்ற சொல்லை மனதில் உச்சரித்தபடி கண்களை மூடிக்கொண்டார்.
வேன் வேகமாக சென்றபோது சின்ன குலுக்கல் ஏற்பட்டது.கண்ணாயிரம் மினரல்வாட்டர் கேனை கெட்டியாக பிடித்துகொண்டார்.லேசாக தாகம் எடுத்தது.தண்ணீர் குடிக்கலாம் என்று நினைத்தார்.ஆனால் வேன் ஓடிக்கொண்டிருக்கும்போது எப்படி கேனை திறந்து தண்ணீரை குடிக்கமுடியும்.வேன் நிற்கும்போது தண்ணீர் குடிக்கலாம் என்று தாகத்தை அடக்கிக்கொண்டார்.
சிறிது தூரம் சென்றதும் வேன் நின்றது.போலீசார் வேனைவிட்டு இறங்கி டீ குடிக்க சென்றார்கள்.அப்போது கண்ணாயிரம் கேனை திறந்து தண்ணீரை கொஞ்சம் குடித்தார்.அவர் மேல் தண்ணீர் சிந்தியது.டம்ளர் கொண்டுவந்திருக்கலாம்.மறந்து போச்சு என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.
பின்னர் மினரல்வாட்டர்கேனை லேசா மூடிவிட்டு பக்கத்தில்வைத்துக்கொண்டார்.
சிறிது நேரத்தில் டீ குடித்துவிட்டு போலீஸ்காரர்கள் வேனில் ஏறினார்கள்.வேன் புறப்பட்டு வேகமாக சென்றது.ஒரு வேகத்தடை வந்தபோது வேன் அந்த வேகத்தடையில் ஏறி இறங்கியபோது கண்ணாயிரம் அருகில் இருந்த மினரல்வாட்டர் கேன் வேனுக்குள் உருண்டு ஓடியது.கண்ணாயிரம் அதை எடுக்க முயன்றபோது தடுமாறி வேனுக்குள் அங்கும் அங்கும் ஆடினார்.அப்போது மினரல்வாட்டர் கேன் மூடிதிறந்து தண்ணீர் வேனுக்குள் தேங்கியது.
கண்ணாயிரம் எவ்வளவோ முயன்றும் வாட்டர் கேனில் இருந்த தண்ணீரை சிந்தாமல் தடுக்கமுடியவில்லை. அய்யோ…மினரல்வாட்டர்போச்சே…என்று கண்ணாயிரம் புலம்பினார்.
போலீஸ்காரர்கள் அவரை அதட்டினர்.போறவழியிலே ஆத்துல தண்ணிபிடிச்சுக்கலாம்…சத்தம்போடக்கூடாது என்று சத்தம்போட்டனர்.
கண்ணாயிரம் விழித்தார். என்னடா இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டுவந்துட்டு மினரல்வாட்டர் இப்படி ஆகிட்டே என்று மனதில் நினைத்துகொண்டார்.
கேன் பரிதாபமாக கிடந்தது.அதை எடுத்து மூடியைவைத்து பூட்டி வைத்துக்கொண்டார்.வேன் ஒரு ரெயில் நிலையம் அருகே வந்து நின்றது.வேனில் இருந்து இறங்கிய போலீசார் கண்ணாயிரத்தை அழைத்து கொண்டு வட நாடு செல்லும் ரெயிலில் ஏறினார்கள்.கண்ணாயிரம் மினரல்வாட்டர் கேனைவிடாமல் கையில்வைத்துக்கொண்டு போலீசார்பின்னால் நடந்தார்.
அதை பார்த்தவர்கள் என்ன இது சாராயம் விக்கிறவரை ரெயிலில் எல்லாம் போலீசார் கூட்டிட்டு போறாங்க…பெரிய சாராய கும்பலைபிடிக்க போறாங்களோ..தெரியலையே. .என்று ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
கண்ணாயிரத்துக்கு வெட்கமாக இருந்தது.மினரல்வாட்டர்கேனில் எழுதிஒட்டி இருந்த பேப்பர் தண்ணீரில் நனைந்து கீழே விழுந்துவிட்டது.அந்த பேப்பர் இருந்தாலாவது இது சாராய கேன் இல்லை…மினரல்வாட்டர் கேன் என்று புரிஞ்சுக்குவாங்க…இப்பம் எப்படி சொல்லுறது என்று கண்ணாயிரம் தவித்தார். அவர் நினைப்பதை அறிந்த போலீசார் மெல்ல…கண்ணாயிரத்தை பார்த்து ஏங்க…அந்த மினரல்வாட்டர் கேனை தூரபோட்டுட்டுவாங்க…பார்க்கிறவங்க தப்பா நினைப்பாங்க…என்று சொன்னார்கள். கண்ணாயிரம் அதை கேட்கவில்லை.என் மனைவி பூங்கொடி கொடுத்துவிட்ட மினரல்வாட்டர்கேன்..திரும்பி ஊருக்கு போனவுடன் கேட்பா…அதனால கீழே போடமுடியாது என்று சொல்லிவிட்டார். போலீசாரும் சரி போகட்டும் என்றுவிட்டுவிட்டார்கள்.கண்ணாயிரம் மினரல்வாட்டர்கேனை மார்போடு அணைத்தபடி ரெயிலில் பயணம் செய்தார்.சிறிது நேரத்தில் ரெயில் வேகமாக செல்ல தொடங்கியது.குளிர்ந்த காற்றுவீசியது…கண்ணாயிரத்தின் கண்களை தூக்கம் தழுவியது.கண்ணாயிரம் சாய்ந்தவாறு தூங்க தொடங்கினார்.போலீசார் அவர் அருகில் நெருக்கமாக அமர்ந்திருந்தனர்.கண்ணாயிரம் வாட்டர்கேனை இறுக்கமாக பிடித்திருந்தார்.பனிரெண்டு மணியானதும் விளக்கு அணைக்கப்பட்டது.ரெயில் மின்னல்வேகத்தில் சென்றது.
ஒரு ரெயில் நிலையம் வந்ததும் ரெயில் நின்றது.கண்ணாயிரம் திடுக்கிட்டு எழுந்தார்.மார்போடு அணைத்துவைத்திருந்த மினரல்வாட்டர் கேனை காணவில்லை.அதை அறிந்து கண்ணாயிரம் போட்ட சத்தம் ரெயில் நிலையம் முழுவதும் எதிரொலித்தது.
(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.