கண்ணாயிரம் குழப்பிய இரண்டாம் திருமணம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min readKannairam’s Confused Second Marriage/ Comedy Story/ Tabasukumar
18.1.2024
கண்ணாயிரம் பாளையங் கோட்டையிலிருந்து புதுவை வந்து வீட்டில் குளித்துக்கொண்டிருந்தார். ஆனால் அவர் விபத்தில் மறைந்துவிட்டதாக நினைத்து அவரது நண்பர்கள் கண்ணாயிரத்தின் மாமனார் அருவா அமாவாசையிடம் செல்போனில் இந்தியில் மர்கயா என்று சொன்னார்கள். அதை அவர் சரியாகப் புரியாமல் கண்ணாயிரம் மறுமணம் செய்யப் போவதாக எண்ணி அருவாளுடன் கோபத்தில் காரில் புதுவை புறப்பட்டு வந்தார். இதையறியாமல் பூங்கொடி கதவை திறக்க அருவாஅமாவாசை ஆவேசத்தில் எங்கே கண்ணாயிரம் எங்கே கண்ணாயிரம் என்று தேடினார்.
அந்த நேரத்தில் கண்ணாயிரம் பட்டு வேட்டி சட்டை அணிந்து சந்தனப் பொட்டுவைத்து உள் அறையிலிருந்து வெளியே வந்து புன்னகையுடன் வணக்கம் மாமா என்று சொல்ல.. அருவா அமாவாசை அருவாளுடன் விரட்ட கண்ணாயிரம் ஓடிப்போய் கதவைப் பூட்டிக்கொண்டார்.
வாடா.. வெளியே வாடா.. என்று அருவா அமாவாசை ஆவேசமாகக் கத்தினார்.
இதைப் பார்த்த பூங்கொடி.. என்னப்பா.. அவரே பயந்தாங்கொள்ளி.. அவருக்கிட்ட அருவாவைக் காட்டி விளையாடுறீங்க.. அவரிடம் அருவாளைக் கொடுக்கணுமுன்னா நேரடியாகக் கொடுங்க.. இப்படி அவரைப் பயங்காட்டாதீங்க.. என்றார்.
இதைக் கேட்ட அருவா அமாவாசை.. அய்யோ நான் சீரியசா பேசுறன்.. இவா காமெடியா நினைக்காளே..நான் என்ன செய்வேன் ..எல்லாம் இந்த படுக்காளிப்பய பண்ணின வேலைதான்..டேய்..என்று கத்தினார்.
பூங்கொடி..ஏம்பா..அமைதியா இருங்க.. கத்தினா உங்க உடம்புக்கு ஆகாது.. மாத்திரை எடுத்துட்டுவந்திங்களா.. உட்காருங்க என்றார்.
அருவாஅமாவாசை.. நான் தலை போற விசியத்தைப் பற்றி பேசுறன்.. இவா புரியாம பேசுறாளே..என்று கண்ணீர்விட்டார்.
பின்னர்..ஏய் கண்ணாயிரம்.. இது உனக்கு அடுக்குமாடா. மனைவி இருக்கும் போது, நீ இரண்டாம் கல்யாணம் பண்ணுவீயாடா..என்று சத்தம் போட்டார்.
அதற்கு கண்ணாயிரம்..ஆமா..நான் நிச்சயமா இரண்டாம் கல்யாணம் பண்ணுவேன் என்றார்.
உடனே அருவா அமாவாசை கோபமாகி ..ஏய்.. ஏய்.. என்னிடம் நேரடியா சொல்லுறீயா.. என்ன சோதனையப்பா.. தாமிரபரணி பாபநாசம் குற்றாலம் போயி முழுகினா பிரச்சினை தீருமுன்னு அனுப்பிவச்சேனேம்மா.. நீ முழுகினாயாம்மா என்று அருவா அமாவாசை பூங்கொடியிடம் கேட்டார்.
அப்பொது அதைக் கேட்ட கண்ணாயிரம் வேகமாக.. மாமா..பூங்கொடி முழுகாம இருக்கா..அதான் பிரச்சினை.. பிரச்சினையா வருகுது என்க அருவா அமாவாசை வாயெல்லாம் பல்லாக.. பூங்கொடியிடம் நீ முழுகாம இருக்கியா என்று கேட்டார்.
பூங்கொடியும்.. தாமிரபரணியில் கடைசியில் வரும்போது குளிக்காம வந்ததைச் சொல்வதாக நினைத்து.. ஆமாப்பா என்றார்.
அருவா அமாவாசை சிரித்தவாறு ஏய் கண்ணாயிரம்..பூங்கொடிதான் முழுகாம இருக்காளே.. பிறகு ஏண்டா இரண்டாம் கலியாணம் பண்ணப் போறேன்னு சொல்லுற.. இரண்டாம் கலியாணம் பண்ணமாட்டேன்னு சொல்லுடா.. மனைவி இருக்கும்போது இரண்டாம் கல்யாணம் பண்ணலாமாடா..என்று அதட்டினார்.
உடனே கண்ணாயிரம்..அதெல்லாம் எனக்குத் தெரியாது.. நான் இரண்டாம் கல்யாணம் பண்ணுவேன் என்று சொன்னார்.
அதைக் கேட்ட அருவா அமாவாசை கொஞ்சம் கோபமாக..மனைவி இருக்கும்போது ஊரில யாராவது இரண்டாம் கல்யாணம் பண்ணியிருக்காங்களாடா.. சொல்லு என்றார்.
அதற்கு கண்ணாயிரம்..ம்..போன மாசம் கூட வடக்குத் தெரு ராமசாமிக்கு இரண்டாம் கல்யாணம் நடந்தது. நானும் பூங்கொடியும் போயி சாப்பிட்டுவிட்டு மொய்யெல்லாம் கொடுத்திட்டுவந்தோம். நானும் இரண்டாம் கல்யாணம் பண்ணுனாத்தானே அந்த மொய்யை வசூல் பண்ணமுடியும் என்று அப்பாவியாகச் சொன்னார்.
அருவா அமாவாசை..ஏய் மொய் வசூல்பண்ணுறதுக்காக இரண்டாம் கல்யாணமா..அந்தத் பணத்தை நானேத் தாரண்டா..இரண்டாம் கல்யாணம் பண்ணாதடா என்று சொல்ல..கண்ணாயிரம் அதெல்லாம் முடியாது.. நான் இரண்டாம் கல்யாணம் பண்ணுவேன்..அப்பத்தான்..நல்ல வேட்டி சட்டை எடுத்துத் தருவாங்க.. கல்யாணச் சாப்பாடு போடுவாங்க..என்று அடுக்கிக்கொண்டு போனார்.
அருவா அமாவாசை டென்சனாகி.. டேய்.. டேய்.. உன்னோட முதல் கல்யாணத்துக்கே நான்தாண்டா உனக்கு பட்டு வேட்டி..பட்டு சட்டை எடுத்துக்கொடுத்தேன்.. அதை தாண்டா..இப்போ போட்டிருக்க..கொஞ்சம் யோசித்துப் பாருடா.. பூங்கொடி வேற முழுகாம இருக்கா.. அவா பாவம் இல்லையா என்று சொன்னார்.
கண்ணாயிரமோ.. இரண்டாம் கல்யாணம் கண்டிப்பா பண்ணுவேன்.. என்க. அருவா அமாவாசை..டேய் நீ வெளியே வந்தாத்தானே.. இரண்டாம் கல்யாணம் பண்ணுவே.. உள்ளேக்கிட என்று ஏசினார்.
பூங்கொடி அருகில் வந்து அப்பா டென்சன் ஆகாதீங்கப்பா.. உங்களுக்கு மயக்கம் வரும்..மாத்திரைகூட எடுக்காம வந்திருக்கீங்க.. உடம்பைப் பாத்துக்கப்பா என்க.. அருவாஅமாவாசையோ..என்னைப் பத்தி கவலைப்படாதம்மா.. நீதான் முழுகாம இருக்க.. நீ உடம்பை நல்லாப் பாத்துக்கம்மா என்றார்.
பூங்கொடி தன் உடம்பை சுற்றிப் பார்த்துக்கொண்டார்… அதைப் பார்த்த அருவா அமாவாசை .. ஏம்மா..டாக்கருக்கிட்ட போனியா.. என்று கேட்டார்.
ஆமாப்பா..பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு போனேன். டாக்கரைப் பார்த்தேன். மருந்து மாத்திரை கொடுத்தார் என்றார்.
அருவா அமாவாசை உடனே..ஏம்மா.. நம்ம ஊருல நல்ல டாக்டர் இல்லையா.. பாளையங் கோட்டைக்குத்தான் போகணுமா.. என்று கேட்டார்.
அதற்கு பூங்கொடி..அப்பா..குற்றாலம் போயிட்டுவந்தப்போ லேசா மயக்கம் வந்துச்சு.. அதான் டாக்கருக்கிட்டே போனேன் என்க.. அருவா அமாவாசை சிரிப்புடன்.. முழுகாம இருந்தா மயக்கம் வரத்தான் செய்யும்.. இனி நம்மவூர் டாக்டருக்கிட்ட காட்டுவோம்.. அவர் கைராசி டாக்டர் .. எல்லாம் நல்லபடி நடக்கும் என்றார்.
பின்னர் கண்ணாயிரத்திடம்.. டேய்..பூங்கொடி முழுகாம இருகான்னு டாக்டரே மருந்து மாத்திரை கொடுத்திருக்காரு.. நீ இந்த வயசிலே இரண்டாம் கல்யாணம் பண்ணப்போறேன்னு சொல்லுறீயடா என்று அதட்ட.. கண்ணாயிரம்.. வடக்குத் தெரு ராமசாமி இரண்டாம் கல்யாணம் பண்ணினாரே.. நான் மட்டும் என்ன என்று வாதாடினார்.
அதற்கு அருவாஅமாவாசை..டேய் வடக்குத் தெரு ராமசாமிக்கு பிள்ளை இல்லாம இருக்கும்.. அதான் இரண்டாம் கல்யாணம் பண்ணியிருப்பார். பூங்கொடிதான் இப்போ முழுகாம இருக்காளே.. பிறகு என்னடா என்றார்.
கண்ணாயிரம்.. உடனே.. மாமா.. வடக்குத் தெரு ராமசாமிக்கு ஐந்து புள்ளைங்க இருக்காங்க.. அவர் இரண்டாம் கல்யாணம் பண்ணலையா என்று கேட்டார்.
அருவா அமாவாசை திடுக்கிட்டவாறு ஐந்து புள்ளைகள் இருக்கும் போது இரண்டாம் திருமணமா . வடக்கு தெரு ராமசாமிக்கு வயசு என்னடா என்று கேட்க..
கண்ணாயிரம்..சிரித்தபடி அவருக்கு அறுபது வயசு என்றார்.
என்னடா சொல்லுறா..அறுபது வயசிலே.இரண்டாம் கல்யாணமா..பொண்ணு யாருடா கொடுத்தா என்று வேகமாக கேட்டார்.
அதற்கு கல்யாணம்..வெகுளித்தனமாக..அவர் பொண்டாட்டித்தான் என்றார்.
அருவா அமாவாசை கடுப்புடன் பொண்ணு யாருடா என்று மீண்டும் கேட்க..கண்ணாயிரம் அவர் பொண்டாட்டித்தான் என்க அருவா அமாவாசை கோபத்துடன்.. என்னிடம் விளையாடாதே.. பொண்ணு யாரு..விவரமா சொல்லு..என்க.
கண்ணாயிரம் ஆமா..விவரமா சொல்லுறேன்..பொண்ணு அவங்க பொண்டாட்டிதான் என்றார்.
பொண்டாட்டியை எப்படிடா இரண்டாவதாக கல்யாணம் பண்ண முடியும்.. ஏதாவது தோஷம் கழிக்க ஏதாவது பண்ணியிருப்பாங்க.. லூசு பய.. அதை கல்யாணம் என்கிறான் என்றார்.
கண்ணாயிரமோ..இல்லை..வடக்குத் தெரு ராமசாமியும் அவர் மனைவியும் மாலை மாத்திக்கிட்டாங்க.. நான் இரண்டு கண்களாலும் பார்த்தேன் என்க.. அருவா அமாவாசைக்கு மயக்கம் வருவது போலிருந்தது.
ஏம்மா அறுபது வயசிலே பொண்டாட்டிக்கே வடக்கு ராமசாமி இரண்டாம் கல்யாணம் பண்ணினான்னு சொல்லுறானே.. ஒண்ணுமே புரியலையே அம்மா.. என்க.. அறுபது வயசிலே நடந்தா அது என்ன கல்யாணம் அப்பா என்று பூங்கொடி கேட்க..அருவா அமாவாசை .அதுவா..அறுபதாம் கல்யாணம்..என்றார்.
அதைத்தான் அவர் சொல்கிறார் என்று பூங்கொடி சொல்ல..மறுபடி ஏன் இந்தப் படுக்காளிப்பய..அறுபதாம் கல்யாணமுன்னு சொல்லாம..இரண்டாம் கல்யாணமுன்னு சொல்லிக்குழப்புறான் என்ற அருவா அமாவாசை..டேய் கண்ணாயிரம்..மாமாவுக்கு வயசாயிட்டுடா.. என்னை சோதிக்காதே..சொல்லு..இரண்டாம் கல்யாணமா..அறுபதாம் கல்யாணமா ..என்று கேட்டார்.
கண்ணாயிரம் வேகமாக..இரண்டாம் கல்யாணம்தான் என்று சத்தமாகச் சொன்னார்.
அதைக் கேட்ட அருவா அமாவாசை ..அம்மாடி என்றவாறு மயங்கி விழுந்தார்.(தொடரும்)
வே.தபசுக்குமார்.புதுவை.