சாத்தான்குளம் சம்பவம்; பாடகி சுசித்ராவுக்கு சி.பி.சி.ஐ.டி. எச்சரிக்கை
1 min readSathankulam incident; CBCID warning to Singer Suchitra
11-7-2020
சாத்தான்குளம் தந்தை-மகன் சாவு குறித்து பாடகி சுசித்ரா வீடியோ பதிவிட்டு இருந்தார். அவருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவருக்கு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அந்த வீடியோ பதிவை நீக்கிவிட்டார்.
தந்தை – மகன் சாவு
சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் விசாரணை என்ற பெயரில் அடித்து கொலை செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் செய்தனர். பிரபலங்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
பாடகி சுசித்ராவும் சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்தை விரிவாக ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் ஆங்கில ஊடகங்கள் இச்சம்பவம் குறித்து பேசத் தொடங்கின.
இதனை அடுத்து பாடகி சுசித்ரா தனது சமூகவலைதளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதில், “கடந்த ஆட்சியிலும் இதே போன்று சம்பவம் நடந்த வீடியோவை பதிவு செய்ய வேண்டும். அதற்காக 2 கோடி ரூபாய் வரை எனக்கு பேரம் பேசப்பட்டது. அன்றிலிருந்து எனக்கு தூக்கமே வரவில்லை” என்று கூறி சமூக வலைதளத்தில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சாத்தான்குளம் விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவை அடுத்து அதிரடி ஆக்ஷனில் இறங்கிய சிபிசிஐடி போலீசார், 10 காவல்துறையினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சிபிசிஐடி போலீசார் விடுத்திருக்கும் அறிக்கையில், “பாடகி சுசித்ரா, என்பவரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சாத்தான்குளம் நிகழ்வு குறித்த காணொளி முற்றிலும் உண்மைத்தன்மையற்றது. இது போன்ற காணொளிகளை வெளியிடுவது வழக்கின் புலனாய்வை பாதிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. எனவே பொதுமக்கள் இத்தகைய காணொளிகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்தது.
நீக்கம்
இதையடுத்து தான் பதிவிட்ட வீடியோவை பாடகி சுசித்ரா நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சிபிசிஐடி போலீசார் அழைத்தார்கள். போலி செய்திகளை பரப்பியதற்காக கைது செய்யப்படுவீர்கள் என்று அச்சுறுத்தினார்கள். எனது வழக்கறிஞரின் அறிவுரைப்படி நான் வீடியோவை நீக்கியிருக்கிறேன். மக்கள் இந்த வழக்கை கவனிக்க வேண்டும். பல தவறான நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.