May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

காந்தாபிரியாணியை ஏலமிட்ட கண்ணாயிரம்../ நகைச்சுவைக்கதை

1 min read

annan who auctioned Kanthapriyani ../ Comedy Story by Thabasukumar

18.6.2022
கண்ணாயிரமும் பூங்கொடியும் குற்றாலம் செல்ல சுற்றுலா பஸ்சில் சென்றார்கள். வழியில் சாப்பிடுவதற்காக கடலூரில் பஸ் நின்றபோது கண்ணாயிரம் மனைவி பூங்கொடியுடன் ஓட்டலுக்கு சென்று காந்தா பிரியாணி சாப்பிட்டார். அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே பஸ் ஹாரன் அடித்ததால் கண்ணாயிரம் பஸ்போய்விடக்கூடாது என்று அலறி அடித்துக்கொண்டு ஓட அவர் சாப்பிட்டதற்கு காசுகொடுக்காமல் ஓடுவதாக சர்வர்கள் நினைத்து கண்ணாயிரத்தை அமுக்கி பிடித்து ஓட்டலுக்கு தூக்கிவந்தனர். பின்னர் பூங்கொடி பணம்கட்டிவிட்டு ஓட்டல்முதலாளியை எச்சரித்துவிட்டு கண்ணாயிரத்தை மீட்டு அழைத்துசென்றார்.
சுற்றுலா பஸ்சை நோக்கி அவர்கள் நடந்தபோது திடிரென்று பஸ் புறப்பட்டு சென்றது. உடனே கண்ணாயிரமும் பூங்கொடியும் ஸ்டாப் ஸ்டாப் என்றபடி பின்னால் துரத்திக்கொண்டு சென்றார்கள். பஸ் நிற்காமல் ஒருவளைவில் வளைந்து சென்றது. கண்ணாயிரம் உடனே தடுப்பு சுவரில் ஏறி குதித்து கீழே விழுந்து காயமாகி…ஸ்டாப்…ஸ்டாப் என்று பஸ்சை வழிமறித்தார். அவருக்கு மூச்சுவாங்கியது.
பஸ்டிரைவர் பஸ்சை நிறுத்தி…ஏய்யா பஸ்சுக்குள்ளேவந்து விழுற…பிரேக் போடலன்னா போய் சேர்ந்திருப்பே…என்று சத்தம்போட்டார். கண்ணாயிரம் உடனே…எங்களைவிட்டுட்டு எப்படி போகலாம்..என்று பதிலுக்கு குரல் கொடுத்தார்.
அதை கேட்ட டிரைவர்…யோவ்..பெட்ரோல் போடுறதற்காக…போறன்..பெட்ரோல் போட்டுட்டு இங்கே திரும்பிவருவேன்..இங்கே நில்லுங்க என்றார்.
கண்ணாயிரம் அதை கேட்கவில்லை. உங்கள நம்பமுடியாது…பூங்கொடி ஓடிவா…பஸ்சிலே ஏறு என்றார். பூங்கொடியும் பிரியாணி பார்சலுடன்…வேக வேகமாக ஓடிவந்தார். கண்ணாயிரம் பஸ்சை வழிமறித்து நின்றார். பூங்கொடி ஓடிவந்து பஸ்சில் ஏறினார். கண்ணாயிரம் ஏறுமுன் டிரைவர் பஸ்சை எடுக்க முயன்றார்.
கண்ணாயிரம் யோவ்..என்னய்யா அவசரம்..பொறுய்யா என்றபடி ஓடும் பஸ்சில் தாவி ஏறினார். அப்பாட…இந்த டிரைவர் தொந்தரவு தாங்க முடியல..என்ன தினாவெட்டு…நான் கீழே விழுந்தா என்ன ஆகும்.. இவரா குடுப்பாரு…என்ன பார்வை..இறைச்சிக்கடைக்காரர் ஏற்பாடுபண்ணின ஆளுன்னா அப்படித்தான் இருக்கும்..முரடு…முரடு…என் கால் எல்லாம் வலிக்கு…என்று முணங்கியபடி தனது சீட்டை தேடி சென்றார்.
பஸ்சில்பாதிபேர்தான் இருந்தார்கள். பயில்வான் உள்பட பலரை காணவில்லை.என்ன..பயில்வானையே காணமே…சுடிதார்சுதா இருக்காளே…ஆ..செல்போனிலே எங்கேயோ பேசுறா..பேசட்டும்..என்றபடி கண்ணாயிரம் சீட்டில் அமர்ந்தார்.
பூங்கொடியும் அருகில் அமர…டிரைவர் முழுவேகத்துடன் பஸ்சை ஓட்டிச்சென்று பெட்ரோல்பங்கில் நிறுத்தினார். கண்ணாயிரம் பஸ்சிலிருந்து வெளியே எட்டிப்பார்த்தார். ஆமா..பெட்ரோல் போடுவதற்காகத்தான் பஸ் இங்கே வந்திருக்கு…நாமத்தான் தப்பா நினைச்சிருக்கோம்..ம்..சத்தம் காட்டக்கூடாது…அமைதியா இருந்திடணும்…ம்..என்று மனதை தேற்றிக்கொண்டார். பெட்ரோல் போட்டு முடித்ததும் பஸ் புறப்பட்டு மீண்டும் பழைய இடத்துக்கே வந்தது. பயில்வான் உள்பட பலரும் பஸ்சில் தாவி ஏறினார்கள். பஸ் மீண்டும் புறப்பட்டது.
கண்ணாயிரத்துக்கு பக்கத்து சீட்டில் பயில்வான்வந்து அமர்ந்தார். என்ன கண்ணாயிரம் எங்கே சாப்பிடபோனிய…ஆளையே காணம் என்று கேட்டார். அதற்கு கண்ணாயிரம் நாங்கள் சாதாரண ஆட்களா..யார்யாரோ பிரியாணி சாப்பிடும்போது நாங்க பிரியாணி சாப்பிடவேண்டாமா என்று சுடிதார் சுதாவை பார்த்து சொன்னார். அவள் கண்ணாயிரத்தை முறைத்தாள். கண்ணாயிரம் திரும்பிக்கொண்டார்.
பின்னர் பூங்கொடி பேசினார்..பயில்வான் சார் நாங்க சாப்பிட்டது…சாதாரண பிரியாணி இல்லை…காந்தா பிரியாணி..வேற எந்த ஊரிலேயும் கிடைக்காது தெரியுமா என்றார்.
அவர் சொன்னது பயில்வானுக்கு புதுமையாக இருந்தது.ஏங்க…நானும் எத்தனையோ பிரியாணி கேள்விபட்டிருக்கேன்..காந்தா பிரியாணி கேள்வி பட்டதில்லையே…என்றார். இதை கேட்டுக்கொண்டிருந்த துபாய்க்காரர்…ஆமா புதுசாத்தான் இருக்கு என்று சொன்னார்.
பயில்வான் உடனே…ஏய் கண்ணாயிரம் சரியா கேட்டியா…காந்தா பிரியாணியா…காக்கா பிரியாணியா என்று மடக்கினார்.
கண்ணாயிரத்துக்கு கோபம் வந்தது.ஏங்க நான் என்ன கேணயனா…காக்காபிரியாணி எனக்கு தெரியாதா..நாங்க சாப்பிட்டது காந்தா பிரியாணிதான் என்று சொன்னார்.
அதை கேட்ட பயில்வான்…சரி..சரி..கண்ணாயிரம் கோபப்படாதே…காந்தா பிரியாணியிலே அப்படி என்னவிஷேசம் என்று கேட்டார்.
ம்…அப்படி கேளுங்க..அந்த பிரியாணி சாதாரணபிரியாணி இல்ல…காந்தா பிரியாணி…அதாவது நடிகை காந்தா விரும்பி சாப்பிடும் பிரியாணி…ஏங்க அப்படி பார்க்கிறீங்க…நடிகைகள் பெயரில..சேலை சட்டை இருக்கும்போது பிரியாணி இருக்கக்கூடாதா என்று கேட்டார்.
அதற்கு பயில்வான் சிரித்தபடி கண்ணாயிரம்…நீ சொல்லுறது சரிதான்…ஆனா காந்தான்னு. ஒரு நடிகையே இல்லையே என்றார்.
ஆ…இல்லாம எப்படி பெயர் வைப்பாங்க..சர்வர் அடிச்சி சொன்னாரே…என்றார் கண்ணாயிரம்.
அதைகேட்ட பயில்வான் மெல்ல..சர்வர் என்னதான் சொன்னாருப்பா சொல்லு…என்றார்.
கண்ணாயிரம் சிரித்தவாறு சொன்னாரே..காந்தான்னு நடிகை இல்லாமா அந்த வயதான சர்வர் எப்படி சொல்லி இருப்பார்..யோசித்துபாருங்க என்றார்.
பயில்வான் ..அது சரி…நீயா காந்தா பிரியாணின்னு கேட்டியா…அவங்களா தந்தாங்களா…என்று கேட்டார்.
அதற்கு கண்ணாயிரம்…ஆ..நானாக காந்தா பிரியாணி கேட்கல…அது எனக்கு தெரியாதே…நான் சுடிதார் சுதா சாப்பிட்ட பிரியாணி கேட்டேன். அதற்கு அந்த சர்வர் சொன்னாரு…சுடிதார் சுதா சாப்பிட்ட பிரியாணியைவிட சுவையான காந்தாபிரியாணி இருக்கு.சாப்பிடுங்க..டேஸ்டு பயங்கரமாக இருக்குமுன்னு சொன்னாரு..அதான் நாங்க வாங்கி சாப்பிட்டோம்..ருசியாத்தான் இருந்துச்சு..ஆனா அதிக உரைப்பு…லெக்பீஸ்வச்சான்..அதுதான் கொஞ்சம் வேகல…காந்தாபிரியாணின்னா அப்படித்தான் இருக்கும்போல…நல்லாத்தான் இருந்துச்சு என்றார் கண்ணாயிரம்.
அப்போது பயில்வான்…எல்லாம் சரிதான்…ஆனா காந்தான்னு ஒரு நடிகை இல்லையே அப்பா என்றார்.
கண்ணாயிரம் கோபம் அடைவதைபார்த்த துபாய்க்காரர்…மெல்ல..கண்ணாயிரம் கோபப்படாதே…நடிகை காந்தாவை நான் எங்கேயோ கேள்விபட்டிருக்கேன்…எங்கேன்னுதான் தெரியல ..கொஞ்சம் பொறு யோசிச்சு சொல்லுறேன் என்றார்.
கண்ணாயிரம்..ம்..நல்லா யோசிங்க என்று சொன்னார். துபாய்காரர் கண்ணாயிரத்தை பார்த்து பழைய படங்கள் பெயர்களை சொல்லுங்க என்று கேட்க கண்ணாயிரம் விழித்தார்.
அப்போது பஸ்சில் இருந்தவர்கள்…அலிபாபாவும் நாற்பது திருடர்களும்..குலேபகாவலி..மூன்று தெய்வங்கள் அதே கண்கள், திருடாதே..ராஜாதேசிங்கு…அரசிளங்குமரி…விவசாயி.வியட்நாம் வீடு..தெய்வமகன்..உத்தம புத்திரன் மதுரை வீரன் கவுரவம் எங்கவீட்டு பிள்ளை என்று எல்லோரும் ஆளுக்கொருபடத்தின் பெயரை சொன்னார்கள்.
துபாய்காரர் எதிர்பார்த்த படத்தை யாரும் சொல்லவில்லை.அவர் …அதிகமாக யோசிக்க தொடங்கினார். கண்களை பலமுறை துடைத்தார். அதைபார்த்த பயில்வான் சிரித்தபடி..ஏங்க கண்ணாயிரம் சொன்ன நடிகை காந்தாவை கண்டுபிடிக்கும் முன்னால உங்க கண்ணில ரத்த கண்ணீர் வந்திடும்போல என்று துபாய்காரரை பார்த்து சொன்னார்.
அவர் உடனே என்ன சொன்னிங்க…ரத்த கண்ணீர்…ஆ..அதேதான்…எம்.ஆர்.ராதா.நடித்த படம்…அதிலேதான் நடிகை காந்தா வரும் என்றார். எம்.ஆர்.ராதாவை மாடியிலிருந்து காலால் எட்டி உதைத்து தள்ளிவிடும்.எம்.ஆர்.ராதாவும் அடியே காந்தா…என்று ஏசுவாரே..அதேதான் என்று புன்னகையுடன் சொன்னார்.
பயில்வான் கண்களை உருட்டியபடி..அந்த காந்தாவா…அது நடனமங்கைதானே…நடிகை இல்லையே..என்று இழுக்க..துபாய்காரர்…ஏங்க படத்தை முழுவதும் பார்த்தியளா…படம் முடியும் வேளையில் சினிமாஸ்டார் காந்தா விபத்தில் இறந்திட்டாருன்னு நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சொல்வாரே என்று அடுக்கினார்.
அதை கேட்ட கண்ணாயிரம் என்ன நடிகை காந்தா இறந்திட்டாரா…எப்போ..என்று அப்பாவியாக கேட்டார்.
உடனே பயில்வான் புன்னகையுடன் ஏங்க..நடிகை காந்தா இறந்து பலவருஷம் ஆச்சு..ஆனா அந்தப்படத்துல நடித்த எம்.என்.ராஜம் இப்போ நல்லாத்தான் இருக்காங்க.. நடிகை காந்தாதான் இறந்துட்டாங்க..
ஆமா..நடிகை காந்தா கடலூர்ஓட்டலுக்கு எப்போது பிரியாணி சாப்பிடவந்தார்..ஆவியா வந்தாரா..என்று கேட்டார்.கண்ணாயிரத்துக்கு ஒன்றும் ஓடவில்லை. அவரைப்பார்த்து என்ன கண்ணாயிரம்..காந்தாவந்து சாப்பிட்டா அதுபழைய ஓட்டலாகத்தான் இருக்கும்.அந்த ஓட்டலில் பழைய பிரியாணியா சாப்பிட்ட என்று ஏளனமாக கேட்டார். கண்ணாயிரம் சூடாக…நீங்க அப்படி கேட்பிங்கன்னு எனக்கு தெரியும்.நாங்க சாப்பிட்டது பழைய பிரியாணி இல்லை.சூடான பிரியாணி..நாங்க கையோடு கொண்டுவந்திருக்கோம்பாருங்க..பூங்கொடி அந்த பிரியாணி பொட்டலத்தை பிரித்துகாட்டு என்றார். பூங்கொடியும் அப்படியே செய்தார். பிரியாணி மணம் கமகமத்தது.எல்லோரும் காந்தாபிரியாணியை ஆச்சரியமாக பார்த்தார்கள். எனக்கு உனக்கு என்று போட்டிபோட்டார்கள். கண்ணாயிரம் யாருக்கும் கொடுக்கவில்லை.
துபாய்காரருக்கு காந்தாபிரியாணி மீது ஆசை வந்தது.அவர் கண்ணாயிரத்தைபார்த்து கண்ணாயிரம் அந்த காந்தாபிரியாணியை ஏலம்விடு…யார் அதிகவிலைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு கொடு என்று சொன்னார்.
கண்ணாயிரத்துக்கும் அது சரி என்றுபட்டது.பிரியாணி பொட்டலத்தை கையில் தூக்கி..காந்தாபிரியாணி இருநூறுரூபாய்…காந்தாபிரியாணி இருநூறு ரூபாய் என்று எலம்விட்டார். தூபாய்காரர் இருநூற்று ஐம்பது என்று சொன்னார்.
இதையடுத்து சுடிதார்சுதா..முன்னூறு ரூபாய் என்று கத்தினார்.
கண்ணாயிரம் அதிர்ந்துபோய் துபாய்காரரைபார்த்தார். நீங்க கேளுங்க..நீங்க கேளுங்க என்று தூண்டிவிட்டார். அவர் முன்னுற்று ஜந்து ரூபாய் என்று சொன்னார். உடனே சுடிதார்சுதா..முன்னுற்று பத்து என்று சொல்ல கண்ணாயிரம் விழித்தார்.
பூங்கொடியோ ஏங்க..சுடிதார்சுதாவுக்கு நம்மபிரியாணியை கொடுக்கக்கூடாது…உயர்த்தி சொல்லுங்க என்று சொல்ல கண்ணாயிரம் என்னசொல்வது என்று தெரியாமல் அவரே முன்னூற்று பதினைந்து என்றார்.
எல்லோரும் சிரித்தார்கள்.கண்ணாயிரத்திடம்முன்னுற்று பதினைந்துக்கு ஏலம் எடுத்தது யார் என்று துபாய்காரர் கேட்டார். நீங்க கேட்கலையா..நானாகத்தான் உளறிட்டேனா..பரவாயில்ல
நீங்க இந்த பிரியாணியை வாங்கித்தான் ஆகணுமுன்னு துபாய்காரரை கண்ணாயிரம் கெஞ்சினார். அவர் முடியாது என்க கண்ணாயிரம் நான் அழுதுருவன்..நீங்க வாங்கிடுங்க என்று சொன்னபோது முன்னூற்று இருபது என்று சுடிதார்சுதா சொன்னார். பிரியாணிக்கு வந்த சோதனையா இது என்று கண்ணாயிரம் திகைத்தபடி நின்றார்.(தொடரும்)

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.